டுவிட்டருக்கு பதில் திடீர் ஃபேமசான Koo.. தகவல்களை லீக் செய்வதை அம்பலப்படுத்திய பிரபல 'ஹேக்கர்'
டெல்லி: இந்திய மொழிகளில் ட்விட்டர் போன்ற அனுபவத்தை வழங்கும் இந்திய மைக்ரோ பிளாக்கிங் தளம் Koo. கடந்த சில நாட்களாக 'கூ' பற்றிதான் சமூக வலைத்தளங்களில் கூவி கூவி பேசி வருகிறார்கள்.
பல அரசு அதிகாரிகளும் டுவிட்டரிலிருந்து 'கூ' செயலிக்கு தங்கள் அக்கவுண்டுகளை மாற்றி வருகிறார்கள்.
செங்கோட்டையில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாகவும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும் வன்முறையை தூண்டும் வகையில் சில டுவிட்டர் பதிவுகள் வெளியாகின. இதை தடுக்க டுவிட்டர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அரசு தரப்பு குற்றச்சாட்டாக இருக்கிறது.
அரசு கோபம்
இது தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட அக்கவுண்டுகளை மத்திய அரசு டுவிட்டருக்கு ரிப்போர்ட்டாக அனுப்பியது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு சில அக்கவுண்டுகள் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்ப்டடன. பிறகு அவை செயல்பட தொடங்கின. இந்த நிலையில்தான் டுவிட்டர் நிர்வாகிகள் சிலரை மத்திய அரசு கைது செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
திடீர் ஃபேமஸ்
இதனால், பாஜக ஆதரவாளர்கள் பலரும் koo எனப்படும் 'இந்திய நிறுவனத்தின்' செயலிக்கு தங்கள் கணக்குகளை மாற்றி வருகிறார்கள். ஆனால் இந்த செயலியில் சீன நிறுவன முதலீடு இருப்பதாகவும் ஒரு செய்தி வலம் வருகிறது. அது ஒரு பக்கம் என்றால் கூ, செயலி பாதுகாப்பு இல்லாதது என்பது மற்றொரு குற்றச்சாட்டாக இருக்கிறது.
தகவல்கள் லீக்
'கூவில்' வெறும் 30 நிமிடங்கள் செலவிட்டதாகவும், அந்த தளம் அதன் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள், பெயர்கள், பாலினம் மற்றும் பலவற்றின் முக்கியமான தகவல்களை லீக் செய்வதை கண்டறிந்ததாகவும் பிரான்ஸ் நாட்டின் பிரபல 'ஹேக்கரான' பாப்டிஸ்ட் கூறியுள்ளார். கூ பற்றிய தனது கண்டுபிடிப்புகளை தெரிவிக்க அவர் தொடர்ச்சியான ட்வீட்களையும் வெளியிட்டார்.
இந்திய டுவிட்டர் என புகழாரம்
'இந்திய ட்விட்டர்' கூ, மத்திய அமைச்சர்களாலும் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோரால் இந்த ஆப் பயன்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிரது. கூ, இந்திய மொழிகளில் ட்விட்டர் போன்ற அனுபவத்தை வழங்குகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த தளத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் அப்ரமேயா ராதாகிருஷ்ணா.