அரசின் தலையீடு இருப்பதால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விசாரிக்க தயக்கம்: கே.எஸ். அழகிரி
அரசின் தலையீடு உள்ளதால் நீதிபதிகள் விசாரிக்க தயங்குகிறார்கள் என்கிறார் அழகிரி
Recommended Video
டெல்லி: ப.சிதம்பரத்தின் வழக்கை விசாரிக்க நீதிபதிகள் அஞ்சுகிறார்கள். அரசின் தலையீடு இருப்பதால் அவர்கள் தயங்குகிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
ப.சிதம்பரம் விவகாரம் பெரும் சூடு பிடித்துள்ளது. அவரைக் கைது செய்ய சிபிஐ வேகம் காட்டி வருகிறது. இதையடுத்து அதிலிருந்து தப்ப உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார் ப.சிதம்பரம்.
ஆனால் அவரது மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி என். வி.ரமணா மறுத்து விட்டார். இதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. இதையடுத்து தற்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்ச் முன்பு ப.சிதம்பரம் மனு செல்லவுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், தலைமை நீதிபதி பெஞ்சுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நீதிபதி என்.வி. ரமணா. அவர் தற்போது மனுவை விசாரிக்க மறுத்துள்ளார். ஏன் என்று தெரியவில்லை.
சுனந்தா புஷ்கர் உடலில் 15 இடங்களில் காயம்.. கோர்ட்டில் போலீஸ் பரபரப்பு தகவல்! சிக்கலில் சசி தரூர்
அரசின் தலையீடு இதில் இருப்பதால் நீதிபதிகள் அஞ்சுகிறார்கள். தயக்கம் காட்டுகிறார்கள். நீதிமன்றத்தின் வழி காட்டுதலை மட்டுமே நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
ப.சிதம்பரத்தின் புகழைக் கெடுக்கும் நடவடிக்கையாகவே இந்த வழக்கை பார்க்கிறோம். ப.சிதம்பரத்தின் நடவடிக்கை ஒவ்வொரு அங்குலமும் சிபிஐக்கும், அமலாக்கப் பிரிவுக்கும் நன்றாகவே தெரியும். உயர்நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டதால் உச்சநீதிமன்றம் போயுள்ளார் ப.சிதம்பரம்.
வழக்கறிஞர் கபில் சிபலின் அறையில்தான் அவர் அமர்ந்திருக்கிறார். இது அனைவருக்கும் தெரியும். சிபிஐக்கும் தெரியும், அமலாக்கப் பிரிவுக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது அவர் தலைமறைவாகி விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். வேண்டும் என்றே அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு செல்கிறார்கள் என்றார் கே.எஸ்.அழகிரி.