புல்வாமா டென்ஷனுக்கு இடையில் குல்பூஷன் ஜாதவ் வழக்கு… சர்வதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடக்கம்
டெல்லி:புல்வாமா தாக்குதல், பாகிஸ்தான், இந்தியா இடையேயான உறவில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த தூக்கு தண்டனையை எதிர்த்து, இந்தியா தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று தொடங்குகிறது.
முன்னாள் இந்திய கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவ் ஈரானில் இருந்து சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்றார் என்று கூறி பாகிஸ்தான் ராணுவம் அவரை கைது செய்தது. பின்னர்... பாகிஸ்தான் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு தீவிரவாதத்தை தூண்டியதாகக் கூறி, பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.
அதனை எதிர்த்து, இந்தியா சார்பில், சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், குல்பூஷனின் மரண தண்டனையை நிறைவேற்ற தற்காலிகத் தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில், இன்று முதல் வரும் 21ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குல்பூஷனின் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்தியாவின் சார்பில் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதாடவுள்ளார்.
இறுதி விசாரணைக்கு பிறகு.... சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புல்வாமா தாக்குதல் சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் இந்த வழக்கு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.