சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு!
Recommended Video
டெல்லி: பாகிஸ்தான் சிறையிலுள்ள இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் தூக்கிலிட கூடாது என்று, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம் (ICJ) இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
உளவாளி மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பாகிஸ்தான் ராணுவ தீர்ப்பாயம் வழங்கிய மரண தண்டனையை நிறுத்தியுள்ளது சர்வதேச நீதிமன்றம்.
ஆனால், குல்பூஷன் ஜாதவ் சம்பவம் இரு நாடுகள் நடுவேயான 'உளவாளிகள்' விவகாரத்தில் புதிது கிடையாது. இதற்கு முன்னர், பஞ்சாபை சேர்ந்த சரப்ஜித் சிங் 1991 ஆகஸ்டில் லாகூர் மற்றும் பைசலாபாத்தில் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புள்ள குற்றவாளி என பாகிஸ்தான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் அதிகாரிகளால், சிங் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், அவரது மரண தண்டனை மேல் நீதிமன்றங்களில் உறுதி செய்யப்பட்டது. கருணை மனுக்கள் கொடுக்கப்பட்டதற்கு மத்தியில் அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால், 2013ம் ஆண்டு, ஏப்ரலில், லாகூரில் உள்ள சிறையில் சரப்ஜித் கொடூரமாக தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். மனிதாபிமான அடிப்படையில் சிங்கை விடுவிக்க இந்தியா விடுத்த வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டன.
அடுத்த மாதமான மே 2ல், சரப்ஜித் சிங் சிகிச்சை பலனின்றி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. எனவே, இப்போதும், சரப்ஜித் சிங்கிற்கு ஏற்பட்ட கதி குல்பூஷன் ஜாதவுக்கு ஏற்பட கூடாது என்றால் அவருக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
சர்வதேச அழுத்தம் காரணமாக, குல்பூஷன் ஜாதவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்க பாகிஸ்தான் முன்வந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.