நகரும் பீரங்கிகள்.. பின்வாங்கும் சீன-இந்திய படைகள்.. லடாக் எல்லை இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா?
டெல்லி: இந்தியாவும், சீனாவும் கிழக்கு லடாக்கின் பாங்காங் த்சோ பகுதியில் இருந்து தங்கள் படைகளை வாபஸ் பெற ஆரம்பித்துள்ளன. பீரங்கிகள் உள்ளிட்ட போர் தளவாடங்கள் பின் நோக்கி நகர்த்தப்படுகின்றன.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லையில் மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான், கிழக்கு லடாக் பகுதியில் சீனா திடீரென ராணுவத்தை குவித்தது. ஊடுருவ முயன்றது.
லடாக் எல்லையில் பாங்கோங் ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்தது.
பேச்சு வார்த்தை
குறிப்பாக, பங்கோங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் பகுதிகளில் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது.
தீர்வு கிடைத்துள்ளது
இந்த நிலையில், இரு நாடுகளின் கமாண்டர்கள் மட்டத்திலான 9வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த மாத இறுதியில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு கிடைத்துள்ளது. அதில், எடுக்கப்பட்ட முடிவின்படி, லடாக் எல்லையில் உள்ள பாங்கோங் ஏரி பகுதியில் இந்தியா-சீனா படைகளையும் விலக்கும் நடவடிக்கை இன்று தொடங்கியுள்ளது. எனவே, எல்லையில் படிப்படியாக அமைதி திரும்பக் கூடிய சூழல் உருவாகி உள்ளது.
சீனா உறுதி செய்துள்ளது
பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதியில் உள்ள, இரு நாட்டு படையினரும் விலகத் தொடங்கியுள்ளதாக சீன பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
நேரம் பிடிக்கும்
அதேநேரம், ஒரே நாளில் இது நடந்து விடாது. சற்று காலம் பிடிக்கும் நடைமுறையாகும். ஒவ்வொரு கட்டத்திலும் படைகள் வாபஸ் பெறப்படுவது கண்காணிக்கப்பட்டு சரிபார்க்கப்படுகிறது.