லடாக் விவகாரம்: இந்தியா-சீனா 16 மணி நேரம் பேச்சுவார்த்தை... என்ன முடிவு எடுக்கப்பட்டது தெரியுமா!
டெல்லி: இந்தியா-சீனா இடையே நடந்த 10-ம் கட்ட பேச்சுவார்த்தையில் லடாக் எல்லையில் ஹாட் பிரிங்ஸ், கோக்ரா, தெப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக பேசிக் கொள்ளப்பட்டது என ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
கிழக்கு லடாக்கில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சீன வீரர்கள் திரும்பி செல்லும்படி இந்திய சார்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இன்று அதிகாலை 4 மணி வரை சுமார் 16 மணி நேரம் நடந்தது. இதில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
லடாக் எல்லை பதற்றம்
இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே லடாக் எல்லையில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பல வீரர்கள் இறந்தனர். தொடர்ந்து எல்லையில் இருதரப்பு படையினரும் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. ராணுவ அதிகாரிகள் அளவில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து படைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொடரும் பேச்சுவார்த்தை
பாங்காங் ஏரி கரையில் இரு தரப்புக்கும் இடையே சமீபத்தில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. கடந்த ஒன்பது மாதங்களாக கிழக்கு லடாக்கில் எல்லை நிலைப்பாட்டிற்கு மத்தியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதலில் பங்கோங் ஏரி மையமாக உள்ளது. எல்லை பகுதிதிகளில் பதற்றத்தை தணிக்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை தொடர்ந்தது.
படைகளை விலக்கிக் கொள்ள முடிவு
கடந்த மாதம் ஒன்பதாவது சுற்று இராணுவப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் இந்தியாவும், சீனாவும் எல்லையில் இருந்து துருப்புக்களை முன்கூட்டியே விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. கிழக்கு லடாக்கின் நிலைமையை உறுதிப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் பயனுள்ள முயற்சிகளை தொடரவும் இரு நாட்டு ராணுவமும் முடிவு செய்தன.
சீனா கருத்து
இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தையின் பலனாக பாங்காங் ஏரியின் வடக்கு கரையில் இந்திய, சீன ராணுவம் தங்களது வீரர்களை அங்கிருந்து விலகிக் கொள்ள ஆரம்பித்தன. இரு நாடுகளின் பீரங்கி டாங்கிகளும், போர் வாகனங்களும் அங்கு இருந்து திரும்பி செல்ல ஆரம்பித்தன. சீன தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சீனியர் கர்னல் வு கியான் இதனை உறுதிப்படுத்தினார். இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இதனை மக்களவையில் உறுதிப்படுத்தினார். பாங்காங் ஏரியின் இருந்து படைகள் விலக்கப்படுவது தொடர்பாக வீடியோவும் வெளியிடப்பட்டன.
16 மணி நேரம் 10-ம் கட்ட பேச்சுவார்த்தை
மேலும், கல்வான் தாக்குதலில் தங்கள் தரப்பு ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் உயிரிழந்தனர் என்று சீனா முதல் முறையாக ஒப்புக் கொண்டது. இந்த நிலையில் இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையிலான 10-ம் கட்ட பேச்சுவார்த்தை மோல்டோ எல்லைபகுதியில் நேற்று நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இன்று அதிகாலை 4 மணி வரை சுமார் 16 மணி நேரம் நடந்தது.
சீன வீரர்கள் திரும்பி செல்ல வேண்டும்
இந்த பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் லெப்டினட் ஜெனரல் பி.ஜி.கே மேனன் தலைமையிலான குழுவும், சீனா தரப்பில் மேஜர் ஜெனரல் லியூ லின் தலையிலான குழுவும் பங்கேற்றன. லடாக் எல்லையில் பாங்காக் ஏரி தவிர ஹாட் பிரிங்ஸ், கோக்ரா, தெப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது என்று ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், கிழக்கு லடாக்கில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சீன வீரர்கள் திரும்பி செல்லும்படி இந்திய சார்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.