சீனாவின் பெயரை சொல்ல பயம் வேண்டாம்.. எப்போது சீனாவை எதிர்ப்பீர்கள்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி!
டெல்லி: பிரதமர் மோடி, எப்போது சீனாவிற்கு எதிராக நிற்பார்? இந்தியாவில் சீனா ஆக்கிரமித்த நிலங்களை நாம் எப்போது மீட்டு எடுப்பார்? என்று பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தியா சீனா இடையே லடாக்கில் மோதல் முற்றி உள்ளது. இன்று எல்லை பிரச்சனை குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் பேசியது இரண்டு நாட்டு மோதலை இன்னும் தீவிரமாக்கி உள்ளது. இந்திய சீன மோதல் குறித்து ராஜ்நாத் சிங் இன்று லோக்சபாவில் அதிரடி உரை நிகழ்த்தினார்.
சீனாவிற்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவர் உரை அமைந்து இருந்தது. அதில் அவர், இந்திய எல்லைக்குள் 38,000 சதுர கி.மீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது. லடாக் எல்லையில் சீனா மேற்கொண்ட ஊடுருவலை வெற்றிகரமாக முறியடித்திருக்கிறோம்.
இந்தியா எதற்கும் தயாராக இருக்கிறது. இந்தியாவின் 90,000 சதுர கி.மீ பகுதியைத் தங்கள் ஆளுகைக்குட்பட்டதாகக் சீனா நினைக்கிறது.சீனாவின் அத்துமீறலை இந்தியா அனுமதிக்காது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானால் 5,000 ச.கிமீ நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலம் தற்போது சீனா வசம் உள்ளது. சீனா எல்லையில் அத்துமீறினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று, ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
ராஜ்நாத் சிங் உரை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தற்போது டிவிட் செய்துள்ளார். அதில், இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிவிப்பு மூலம் இந்தியாவில் சீனாவின் ஆக்கிரமிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் பிரதமர் மோடி இந்தியாவில் சீனா ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று பொய்யாக கூறியதும் உறுதியாகி உள்ளது.
இந்த நாடு எப்போதும் இந்திய ராணுவத்திற்கு உறுதியான ஆதரவு தரும். எப்போதும் ராணுவத்திற்கு ஆதரவாக அவர்களுடன் உடன் நிற்கும். ஆனால் பிரதமர் மோடி, எப்போது சீனாவிற்கு எதிராக நிற்பார்? இந்தியாவில் சீனா ஆக்கிரமித்த நிலங்களை நாம் எப்போது மீட்டு எடுப்போம்? சீனாவின் பெயரை சொல்ல பயப்பட வேண்டாம், என்று பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.