இந்தியா - சீனா எல்லை விவகாரம்.. 9 மணி நேரம் நடந்த முக்கிய மீட்டிங்.. விவாதிக்கப்பட்டது என்ன?
டெல்லி: இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகளிடையே எல்லை விவகாரம் தொடர்பாக சுமார் 9 மணி நேரம் நீட்டித்த 12ஆம் கட்ட பேச்சுவார்த்தை இரவு 7.30 மணியளவில் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே எல்லைப் பகுதியில் இந்தியச் சீன ராணுவத்திற்கு இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாகக் கடந்த ஆண்டு நடந்த கல்வான் மோதலுக்குப் பிறகு நிலைமை மோசமானது.
அதைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவங்களும் எல்லையில் அதிகளவில் ராணுவத்தைக் குவிக்கத் தொடங்கின. இதனால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
நெருங்கி வரும் சீனா.. தாலிபான்கள் குழுவின் அதிமுக்கிய சீன பயணம்.. ஆப்கனில் அடுத்து என்ன? பரபர தகவல்
மீண்டும் பேச்சுவார்த்தை
எல்லையில் ஏற்பட்ட இந்த பதற்றமான சூழ்நிலையைத் தணிக்கும் வகையில் இரு நாட்டு உயர் ராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுவரை இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனாலும், ஒரு சில பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் இன்னும் ராணுவம் திரும்பப் பெறப்படவில்லை.
12ஆம் கட்ட பேச்சுவார்த்தை
இந்தச் சூழ்நிலையில், இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளிடையே இன்று 12ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் இடையே சுமார் 3.5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இப்போது பேச்சுவார்த்தை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 11ஆம் கட்ட பேச்சுவார்த்தை கொரோனா 2ஆம் அலை ஏற்படுவதற்கு முன், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டம் 13 மணி நேரம் நடைபெற்றது.
Recommended Video
9 மணி நேரம் நீட்டித்த மீட்டிங்
இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய 12ஆம் கட்ட பேச்சுவார்த்தை சுமார் 9 மணி நேரம் நீட்டித்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒரே நேரத்தில் இரு நாடுகளும் ஒன்றாக ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பரஸ்பரம் இரு நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் இந்தியா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் சந்திப்பு
பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாங்கோங் ஏரியில் மட்டும் ராணுவம் திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி-யை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த மீட்டிங்கில் தான் எல்லையில் அமைதி திரும்பத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் இரு நாட்டின் ராணுவ தளபதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்பதையும் இரு நாட்டு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டனர். அதைத் தொடர்ந்தே இப்போது இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது குறிப்பிதக்கது.