லடாக், காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே- சீனாவுக்கு மத்திய அரசு பதிலடி
டெல்லி: லடாக், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களும் அருணாச்சல் பிரதேசமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி; இந்தியாவின் உள்விவகாரங்களில் சீனா தலையிட எந்த உரிமையும் கிடையாது என்று மத்திய அரசு பதிலடி தந்துள்ளது.
லடாக் கிழக்கு எல்லைகள் மோதல், ஊடுருவல்கள் தொடர்பாக இந்தியா- சீனா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தியா- சீனா இடையே அக்டோபர் 12-ல் 7-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பாலங்கள் திறப்புக்கு எதிர்ப்பு
இந்தப் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக இந்தியாவும் சீனாவும் கூட்டறிக்கையில் தெரிவித்திருந்தன. அதேநேரத்தில் எல்லை பகுதியில் புதிய பாலங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.
லடாக் யூனியன் பிரதேசம்
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட சீனாவின் வெளியுறவு அமைச்சகம், லடாக் யூனியன் பிரதேசத்தை இந்தியா சட்டவிரோதமாக உருவாக்கி உள்ளது. அருணாச்சல் பிரதேசத்தைப் போல லடாக் யூனியன் பிரதேசத்தையும் சீனா ஒருபோதும் அங்கீகரிக்காது என கூறியிருந்தது.
சீனாவுக்கு மத்திய அரசு பதிலடி
இதற்கு மத்திய அரசு இன்று பதிலடி கொடுத்துள்ளது. டெல்லியில் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஶ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: லடாக், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். அதேபோல்தான் அருணாச்சல் பிரதேசமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே.
தலையிடும் உரிமை கிடையாது
இந்தியாவின் உள்விவகாரங்களில் சீனா தலையிட எந்தவித தார்மீக உரிமையும் முகாந்திரமும் கிடையாது. எல்லைப் பகுதிகளில் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுத் திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது. பாதுகாப்பு நலன் கருதியும் எல்லைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அனுராக் ஶ்ரீவத்சவா கூறியுள்ளார்.