லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை: உ.பி. அரசின் தாமதமான அறிக்கை தாக்கல்- உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
டெல்லி: லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் உத்தரப்பிரதேச அரசு தாமதமாக அறிக்கை தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வரும் 26-ந் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களில் இதுவரை 800க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
நெருங்குகிறோம்.. இந்தியாவில் இதுவரை 99 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.. மத்திய அமைச்சர் தகவல்
உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு விவசாய சட்டங்களை நிறுத்தி வைத்துள்ளது. விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் பல்வேறு மாநிலங்களிலும் தொடருகிறது.
லக்கிம்பூர் படுகொலைகள்
உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கடந்த 3-ந் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். டெல்லி போராட்டத்தின் ஒருபகுதியாக துணை முதல்வர் மவுரியாவுக்கு லக்கிம்பூரில் விவசாயிகள் கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் ஊர்வலம் மீது காரை ஏற்றியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
உச்சநீதிமன்றம் அதிருப்தி
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் நடத்திய விசாரணையின் போது, லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலைகள் தொடர்பாக ஒருவரை கூட உ.பி. அரசு கைது செய்யாததற்கு கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் மகன் உட்பட 10 பேர் கைது
மேலும் இந்த படுகொலை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
உச்சநீதிமன்றம் மீண்டும் அதிருப்தி
உ.பி. அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜரானார். அப்போது, நேற்று இரவு உ.பி.அரசு சார்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும் என காத்திருந்தோம். ஆனால் இன்று காலையில்தான் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்; போலீசார் விசாரணை மிக மிக தாமதமாக இருக்கிறது என தலைமை நீதிபதி என்.வி.ரமணா அதிருப்தி தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஹரீஷ் சால்வே, சாட்சிகளின் கூடுதல் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது என்றார். இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, 34 சாட்சிகளில் 4 பேரின் வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்திருக்கிறீர்கள்.. ஏன் மற்றவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய தாமதம்? என கேள்வி எழுப்பினார். மேலும் வரும் 26-ந் தேதி விரிவான புதிய அறிக்கையை உ.பி. அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தது. முன்னதாக இந்த வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று ஹரீஷ் சால்வே கேட்டுக் கொண்டார். ஆனால் இதனை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் நிராகரித்தது.