உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.. எதிரிகளை எதிர்க்கும் வல்லமை உண்டு.. லாலு
டெல்லி: உடல்நலம் பாதிக்கப்பட்ட நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாலு பிரசாத் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாலு பிரசாத் யாதவின் ஆலோசனைபடி அவரது அலுவலகத்தினர் உருது மொழியில் ட்வீட் போட்டுள்ளனர். அதில் அவர் கூறுகையில் எனது கண்களிலிருந்து தீப்பிழம்புகள் இன்னும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.
சிறுபான்மையினருக்கு எதிரானதை அனுமதிக்கக் கூடாது என்ற எனது கொள்கைகள் இன்னும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. நோய்வாய்பட்டவர் இன்னும் உயிரோடு இருக்கிறாரே என நீங்கள் மனசோர்வடைய கூடாது.
|
கடவுளுக்கு நன்றி
சிறை தண்டனை உள்ளிட்ட ஆயிரம் காயங்கள் ஏற்பட்டாலும் இன்னும் எதிரிகளை எதிர்த்து நிற்கும் திறமை அப்படியே உள்ளது. எனது சுயமரியாதை அப்படியே உள்ளதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று லாலு தெரிவித்துள்ளார்.
உருது மொழியில் ட்வீட்
இந்த ட்விட்டரில் சிறுபான்மையினருக்கு ஆதரவாக தனது நிலைப்பாட்டை தனது கட்சியினரிடம் பொதுக் கூட்டத்தில் லாலு பேசிய வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்களுக்கு ஆதரவாக உருது மொழியில் ட்வீட் போட்டதால் இது வைரலாகி வருகிறது.
இரு அவைகளில்
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்து, கிறிஸ்துவர், பார்ஸி, சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜோரோஸ்டியர்கள் ஆகிய 6 பிரிவினருக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
போராட்டம்
இதில் முஸ்லீம்களின் பெயர் இடம்பெறாததால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களாக பல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவும் சிறையில் இருந்தபடியே இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.