கொரோனா தடுப்பு.. பிரதமர் மோடி நடவடிக்கை 'மன்னிக்க முடியாதது' - லான்செட் 'பொளேர்'
டெல்லி: கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதை விட, ட்விட்டரில் விமர்சனங்களை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடியின் அரசாங்கம் அதிக ஆர்வம் கொண்டு செயல்படுவதாக லான்செட் கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தாறுமாறாக சென்றுக் கொண்டிருக்கிறது. தினசரி பாதிப்பு நான்கு லட்சத்தை தாண்டி எகிற, மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்க, அரசாங்கங்களோ விழி பிதுங்கி நிற்கின்றன.
'வங்கத்தில் ஆட்சியை பிடிக்க.. பாஜக ஒட்டுமொத்த இந்தியாவையே கிட்டதட்ட அழித்துவிட்டது'.. மம்தா சாடல்
ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டிசிவிர் மருந்து பற்றாக்குறை என்று பல்வேறு மாநிலங்கள் தடுமாறிக் கொண்டிருக்க, மத்திய அரசு குறித்த பரபரப்பு விமர்சனம் ஒன்று வெளியாகியுள்ளது.
விமர்சனங்களுக்கு பதில்
புகழ்பெற்ற மருத்துவ ஆய்விதழான 'தி லான்செட்' , கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதை விட, ட்விட்டரில் விமர்சனங்களை கட்டுப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் அதிக ஆர்வம் கொண்டு செயல்படுவதாக தெரிகிறது என்று கூறியுள்ளது. மேலும், நெருக்கடியான நேரத்தின் போது, விமர்சனங்களுக்கு பதில் சொல்வதற்கும், திறந்த கலந்துரையாடல் மேற்கொள்வதிலும் பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் "மன்னிக்க முடியாதவை" என்று அது கூறியுள்ளது.
அரசே பொறுப்பு
ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் COVID-19 காரணமாக 1 மில்லியன் இறப்புகளை இந்தியா காணும் என்று சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவன தகவலை மேற்கோள் காட்டி 'லான்செட்' வெளியிட்ட செய்தியில், "சுயமாக ஏற்படுத்தப்பட்ட தேசிய பேரழிவிற்கு மோடியின் அரசாங்கமே பொறுப்பாகும்" என்று குறிப்பிட்டுள்ளது.
பின்னடைவு
சூப்பர்ஸ்ப்ரெடர் நிகழ்வுகளின் அபாயங்கள் குறித்து எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், அரசாங்கம் மத விழாக்களை நடத்த அனுமதித்தது. நாடு முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான மக்கள் அவற்றில் கலந்து கொண்டனர். இது கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தின் பின்னடைவில் முக்கியமானது என்று லான்செட் தெரிவித்துள்ளது.
எண்ட்கேம்
மேலும், "இந்தியாவில் மருத்துவமனைகள் அதிகமாக உள்ளன, ஆனால் சுகாதார ஊழியர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர். மருத்துவ ஆக்ஸிஜன், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் பிற தேவைகளைத் தேடும் அவநம்பிக்கையான மக்கள் (மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள்) சமூக ஊடகங்களில் நிறைந்துள்ளனர். மார்ச் மாத தொடக்கத்தில் கோவிட் -19 பாதிப்பின் இரண்டாவது அலை அதிகரிக்கத் தொடங்குவதற்கு முன்பு, இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இந்தியா தொற்றுநோயின் "எண்ட்கேமில்" (முடிவில்) இருப்பதாக அறிவித்தார்.
பொய் பரிந்துரை
"இரண்டாவது அலையின் ஆபத்துகள் குறித்து பலமுறை எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பல மாதங்கள் குறைந்த எண்ணிக்கையிலான வைரஸ் பாதிப்பு பதிவானதை நம்பி, இந்தியா COVID-19 ஐ வென்றுவிட்டது என்று அரசு எண்ணியது. இந்தியா கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அடைந்தது என்று பொய்யாக பரிந்துரைத்து, மனநிறைவு அடையச் செய்தது. ஆனால் ஜனவரி மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஒரு சர்வேயில், 21% மக்கள்மட்டுமே SARS-CoV க்கு எதிராக எதிர்ப்பாற்றலை பெறுவதாக தெரிவித்தது.
தோற்ற தடுப்பூசி திட்டம்
இந்தியாவின் தடுப்பூசி திட்டமும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. COVID-19 அடிப்படையில் முடிந்துவிட்டது என்ற செய்தி இந்தியாவின் COVID-19 தடுப்பூசி பிரச்சாரத்தின் தொடக்கத்தையும் குறைத்துவிட்டது. மக்கள்தொகையில் 2% க்கும் குறைவானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவின் தடுப்பூசி திட்டம் விரைவில் வீழ்ந்தது. மாநிலங்களுடனான கொள்கையில் மாற்றம் குறித்து விவாதிக்காமல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி விரிவுபடுத்துதல், பொருட்களை குறைத்தல், குழப்பங்களை உருவாக்குதல் மற்றும் தடுப்பூசி அளவுகளுக்கான சந்தையை உருவாக்குதல் போன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை மக்களுக்கு
இறுதியாக, அந்த கட்டுரையில் இரு ஆலோசனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, தடுப்பூசி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு அனைத்து உரிய வேகத்திலும் செயல்படுத்தப்பட வேண்டும். தடுப்பூசி விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும் (அவற்றில் சில வெளிநாட்டிலிருந்து வர வேண்டும்). நகர்ப்புறத்தில் மட்டுமல்ல, 65% க்கும் அதிகமான மக்கள் (அதற்கு மேற்பட்டவர்கள்) அல்லது 800 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கிராமப்புற மற்றும் ஏழை குடிமக்களிடம் தடுப்பூசி பிரச்சாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.