மத ரீதியாக நாட்டை பிரித்திருக்காவிட்டால் குடியுரிமை மசோதாவுக்கு அவசியமே இல்லை.. அமித் ஷா ஆவேச பேச்சு
டெல்லி: காங்கிரஸ் செய்த வரலாற்று தவறை திருத்தவே, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளோம், என்று ராஜ்யசபாவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
லோக்சபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ராஜ்யசபாவில் மசோதா இன்று அமித் ஷாவால் தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினர்.
இந்த விவாதங்களுக்கு பதிலளித்து, அமித் ஷா இன்று மாலை 6.30 மணியளவில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று சில உறுப்பினர்கள் கூறி, இந்த சட்டத்திற்கான அவசியத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். அவர்களில் சிலர் அரசியல் காரணங்களுக்காக, இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாகவும், கூறினர். எல்லா கேள்விகளுக்கும் நான் ஒவ்வொன்றாக பதிலளிக்க தயாராக உள்ளேன். ஆனால் முதலில், அதற்கு ஒரு சுருக்கமான வரலாற்று பின்னணியை சொல்ல விரும்புகிறேன்.
காங்கிரஸ் மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தியது. எனவே, குடியுரிமை (திருத்த) மசோதாவுக்கான தேவை எழுந்தது.
மதத்தின் அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டிருக்கா விட்டால், இந்த மசோதாவின் தேவை இருந்திருக்காது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில், அந்தந்த நாட்டில் வாழும் சிறுபான்மையினருக்கு உரிமைகளை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த வாக்குறுதி பாகிஸ்தானால் பின்பற்றப்படவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றியது இந்தியாதான். பாகிஸ்தானும், ஆப்கனும், வங்கதேசமும் சிறுபான்மையினரை விரட்டியடித்தன.
குடியுரிமை திருத்த மசோதா உண்மையான பிரச்சினைகளிலிருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில், இந்த மசோதா முதலில் 2015ல் அரசால் தாக்கல் செய்யப்பட்டது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து சிறுபான்மையினர் விரட்டப்படுகிறார்கள். அவை அனைத்தும் இஸ்லாமிய நாடுகள், இந்த நாடுகளில் முஸ்லிம்களை மதரீதியாக துன்புறுத்துவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே, இந்த நாடுகளில் மத துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், சமணர்கள், புத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த மசோதா முன்மொழிகிறது.
இலங்கையிலிருந்து வரும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடந்த காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இப்போது, மற்ற மூன்று நாடுகளிலிருந்து வருபவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சட்டம் உருவாகுகிறது. இவ்வாறு அமித் ஷா விளக்கம் அளித்தார்.