அடுத்ததாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது
டெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் விடுத்த கோரிக்கைக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் உரிய பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றவும் சட்ட அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதன் அடுத்த கட்டமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது.
மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையம் ஒரு பரிந்துரையை அனுப்பியது. அதில், தெளிவான வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கு ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் ஆதார் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியிருந்தது.
தமிழகத்திலும் ஒரே நாடு ஒரே ரேஷன் - நெல்லை, தூத்துக்குடியில் முதல் கட்டமாக அமல்: அரசாணை வெளியீடு
இத்திருத்தத்தின் படி ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களிடமோ அல்லது புதியதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புவோரிடமோ தேர்தல் அலுவலர், ஆதார் எண்ணை கேட்க வகை செய்கிறது. இதற்கு கடந்த செப்டம்பர் மாதம் சட்ட அமைச்சகம், தேர்தல் ஆணையத்துக்கு பதில் அனுப்பியுள்ளது.
அதில் கொள்கை அளவில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்; அதேநேரத்தில் அப்படி இணைக்கும் போது தகவல்கள் திருட்டு ஏதும் நடைபெறாமல் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கவனத்துடன் பின்பற்றலாம் எனவும் சட்ட அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.