இந்தியாவில் இடதுசாரிகள் கதை முடிந்தது! 5 சீட் தேறுவதே கடினம்!
டெல்லி: இந்தியாவில் இடதுசாரி அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர்கள் முடிவுரை எழுதிவிட்டனர். இம்முறை லோக்சபா தேர்தலில் அதிகபட்சமாக 5 தொகுதிகளில் இடதுசாரிகள் வெல்வதற்கே போராடி வருகின்றனர்.
தேசிய அரசியலில் தீர்மானிக்கும் சக்திகளாக இடதுசாரிகள் இருந்த வரலாறு உண்டு. ஆனால் இடதுசாரிகள் மீதான நம்பிக்கை மெல்ல மெல்ல தகர்ந்தது.
மேற்கு வங்கத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த இடதுசாரிகளை திரிணாமுல் காங்கிரஸ் வீழ்த்தியது. அதே கதைதான் திரிபுராவிலும் நடந்தது.
கேரளாவில் மட்டும் ஆட்சியில் இருந்து வருகின்றனர் இடதுசாரிகள். ஆனால் லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா என அதன் கோட்டைகளாக காட்சிதந்த இடங்கள் இப்போது பாலைவனமாகிப் போனது.
உ.பி.யில் கை கொடுக்காத மெகா கூட்டணி.. அகிலேஷ்-மாயாவதிக்கு 'ஷாக்' தோல்வி
அகில இந்திய அளவில் இடதுசாரிகள் ஒட்டுமொத்தமாக 5 இடங்களில் வென்றாலே அதிசயம் என்கின்ற நிலைதான் தற்போது உள்ளது. தமிழகத்தில் மதுரை, கோவையில் அவ்வப்போது முன்னிலையை காட்டி வருகின்றன இடதுசாரி வேட்பாளர்கள்.
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள், பாஜகவுடன் இணைந்து திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த முயற்சித்தனர். அதனால் ஒட்டுமொத்தமாக இடதுசாரிகளின் வாக்கு வங்கி பாஜகவுக்கு போய்விட்டது. கேரளாவில் ஆட்சியில் இடதுசாரிகள் இருந்தபோதும் லோக்சபா தேர்தலில் ஒரு இடத்திலும் முன்னணியில் இல்லை என்பது பரிதாபத்துக்குரியது.