ஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி! க்ளீன் ஸ்வீப்
டெல்லி: இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எஃப்.ஐ), ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (டி.எஸ்.எஃப்), அகில இந்திய மாணவர் சங்கம் (ஏ.ஐ.எஸ்.ஏ) மற்றும் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (ஏ.ஐ.எஸ்.எஃப்) ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய இடதுசாரி குழு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் (ஜே.என்.யு.எஸ்.யூ) தேர்தலில், நான்கு மத்திய பதவிகளையும் வென்று அசத்தியுள்ளது.
எஸ்.எஃப்.ஐ 13 ஆண்டுகளுக்குப் பிறகு தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது. ஆயிஷ் கோஷ் 2,313 வாக்குகளுடன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1,128 வாக்குகளைப் பெற்ற பாஜகவின் மாணவர் பிரிவான 'ஏபிவிபி' அமைப்பின் மனிஷ் ஜாங்கிட் தோல்வியடைந்தார்.
பொதுச் செயலாளர் பதவிக்கு, ஏ.ஐ.எஸ்.ஏ அமைப்பின் சதீஷ் சந்திர யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டிஎஸ்எஃப்-இன் சாகேத் மூன் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இணைச் செயலாளர் பதவியை, ஏ.ஐ.எஸ்.எஃப் அமைப்பின் முகமது டேனிஷ் கைப்பற்றினார்.
இடதுசாரிகள் அமைப்பினர், 2016 முதலே, இந்த நான்கு முக்கிய இடங்களையும் கைப்பற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு அனைத்து பதவிகளிலும் ஏபிவிபி இரண்டாவது இடத்தைதான் பிடித்தது.
காஷ்மீரில் மத்திய அரசு 370 வது பிரிவை ரத்து செய்ததைக் கொண்டாடுவதன் மூலம் வாக்குகளைப் பெறலாம் என்று ஏபிவிபி நம்பியிருந்தது, இது அவர்களின் தேர்தல் பிரச்சார உரைகளில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது. ஆனால் அது பலனளிக்கவில்லை.
இந்த தேர்தலில், காங்கிரஸின் தேசிய மாணவர் சங்கம், மற்றும் சத்ரா ராஷ்டிரிய ஜனதா தளமும் போட்டியிட்டன. கடந்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு 67.9 சதவீதமாக பதிவாகியிருந்தது. இது கடந்த 7 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் மிக அதிக வாக்குப்பதிவாக சொல்லப்படுகிறது. 5,700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் வாக்களித்தனர்.