கேட்காமலே பணத்தை அள்ளிக்கொடுத்த எல்ஐசி.. நெகிழ்ச்சியில் சிஆர்பிஎப் வீரர் குடும்பம்
Recommended Video
டெல்லி: காஷ்மீரில் தீவிரவாதி தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரரின் குடும்பத்திற்கு எந்த ஆவணங்களையும் கேட்காமலேயே, முதலீட்டு பணத்தை வழங்கியுள்ளது எல்ஐசி.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று முன்தினம், தீவிரவாதியின் தற்கொலைப்படை தாக்குதலில், 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர்.
தமிழகத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் சிவச்சந்திரன் ஆகியோரும், தாக்குதலில் கொல்லப்பட்டவர்களாகும்.
கர்நாடகா வீரர்
இதேபோல, கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த, குரு என்பவரும் வீர மரணமடைந்தார். இவர் தனது குடும்பத்தினருக்காக எல்ஐசியில் முதலீடு செய்து வந்தார். இந்த நிலையில், குரு மரணமடைந்ததுமே, மறுபேச்சு பேசாமல், எல்ஐசி அவரது குடும்பத்திற்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்துள்ளது.
உடனே பணம்
குரு வீர மரணம் அடைந்த செய்தியை அறிந்ததுமே, அவர் யாரை நாமினியாக நியமித்திருந்தாரோ அவரது கணக்கிற்கு, உரிய பணத்தை, உடனே எல்ஐசி அனுப்பிவிட்டது. எந்த ஆவணத்தையும், எல்ஐசி அதிகாரிகள் கேட்கவில்லை. அதுமட்டுமா.. யாரும் விண்ணப்பிக்காமலேயே பணத்தை வழங்கிவிட்டது.
சான்றிதழ் தேவையில்லை
மொத்தம் ரூ.3,82,199 பணத்தை குருவின் குடும்பத்திற்கு வழங்கியுள்ளது. அவரது இறப்பு சான்றிதழை கூட எல்ஐசி கேட்கவில்லை என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டியது. வீரரின் உடல் சொந்த ஊர் வருவதற்குள்ளாக, அவருக்கு சேர வேண்டிய பணத்தை எல்ஐசி வழங்கிவிட்டது என நெட்டிசன்கள் புகழாரம் சூட்டி வருகிறார்கள்.
பாராட்டுகள்
அரசு அலுவலகங்களில் மிக மந்தமாக பணிகள் நடைபெறும் என கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சிஆர்பிஎப் வீரர் விஷயத்தில் எல்ஐசி அதிகாரிகள் காட்டிய வேகம், பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, பாராட்டுக்களையும் ஈட்டித் தந்துள்ளது.