எல்ஐசி குறித்து சமூக வலைதளத்தில் பரவும் தகவலை நம்பாதீங்க.. எல்ஐசி முக்கிய விளக்கம்
டெல்லி: எல்.ஐ.சி நிறுவனம் கடுமையாக நஷ்டம் அடைந்திருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலுக்கு எல்.ஐ.சி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதாகவும், எல்.ஐ.சியின் நிலை ஆரோக்கியமாக இருப்பதாகவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் என்ற எல்.ஐ.சி நிறுவனம் கடுமையாக நஷ்டம் அடைந்தவிட்டதாகவும், பல லட்ச்சக்கணக்கான பாலிசி தாரர்களின் பணத்திற்கு பாதுகாப்பு இல்லை என்ற ரீதியிலும் சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவியது. இதனால் எல்.ஐ.சியில் பணம் போட்ட ஏராளமான மக்கள் கவலை அடைந்தனர்.
பலரும் எல்.ஐ.சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு கவலைகளுடன் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த எல்.ஐ.சி நிறுவனம், சமூக வலைதளங்களில் பரவிய தகவல் முற்றிலும் வதந்தி என்று விளக்கம் அளித்துள்ளது.
நன்றாக உள்ளது
இது தொடர்பாக எல்.ஐ.சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதுபோன்ற தவறான வதந்திகளை நாங்கள் மறுக்கிறோம், எங்கள் பாலிசிதாரர்களுக்கு அதன் நிதி நிலை நல்ல நிலையில் ஆரோக்கியமாக இருக்கிறது என்று உறுதியளிக்க விரும்புகிறோம், மேலும் இதுபோன்ற தவறான செய்திகளை அறிந்து கொள்ள வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறோம்.
தவறான செய்திகள்
சமூக ஊடகங்களில் வரும் இதுபோன்ற செய்திகள் உண்மையில் தவறானவை, உறுதிப்படுத்தப்படாதவை மற்றும் கெட்ட எண்ணத்தை விதைக்கும் நோக்கம் கொண்டவை மற்றும் பாலிசிதாரர்களின் மனதில் பீதியை ஏற்படுத்தும். எல்.ஐ.சி நிறுவனத்தினை பொதுமக்களின் மத்தியில் மோசமாக சித்திரிப்பதற்காக இதுபோன்ற செய்திகள் பரப்படுகின்றன.
பாலிசி எண்ணிக்கை
உண்மையில் 2018-19 ஆம் ஆண்டில், எல்.ஐ.சி இதுவரை இல்லாத அதிகபட்ச போனஸ் ரூ .50,000 கோடியை பாலிசிதாரர்களுக்கு அறிவித்துள்ளோம். ஆகஸ்ட் 31 நிலவரப்படி, காப்பீட்டாளரின் சந்தைப் பங்கு, பாலிசிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை 72.84% ஆகவும், முதல் ஆண்டு பிரீமியத்தைப் பொறுத்தவரை இது 73.06% ஆகவும் உள்ளது.
அதிகரித்த மதிப்பு
முதல் ஆண்டு பிரீமியத்தில் எல்.ஐ.சியின் சந்தை பங்கு மதிப்பு 2019 மார்ச் மாதத்தில் 66.24 சதவீதத்திலிருந்து 2019 ஆகஸ்டில் 73.06 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வதந்தி பரவியது ஏன்
எல்.ஐ.சி நிறுவனம் முதலீடு செய்த பல நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிந்து இருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து சமூக வலைதளங்களில் எல்.ஐ.சி நிறுவனத்தின் நிதிநிலை குறித்து தவறான தகவல் பரவி இருக்கிறது.