தமிழகம், புதுவையில் கடும் எதிர்ப்பு.. அதிருப்தியில் பாஜக தலைமை.. ஆளுநர் கிரண்பேடி மாற்றப்படுகிறாரா?
டெல்லி: தமிழகம், புதுவையில் கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றப்படுகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருவதாலும் மழையில்லாததாலும் பெரும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. மக்கள் நாள்தோறும் தண்ணீருக்காக காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசும் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ரூ 65 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி அடைந்து வரும் நிலையில் எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல் புதுவை துணை நிலை ஆளுநர் பேசியுள்ளார்.
அணுகுமுறை
அவர் பேசுகையில் சென்னையில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் ஆகியவற்றுடன் மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகுமுறையும் காரணம் என கிரண்பேடி தெரிவித்திருந்தார்.
முற்றுகை
முதல்வர் நாராயணசாமியுடன் எப்போதும் மல்லுக்கட்டி வரும் அவர் தற்போது சென்னை மக்கள் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி திமுக நேற்று புதுவை ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது.
பாதுகாப்பு துறை
இந்த நிலையில் கிரண்பேடி விவகாரம் குறித்து அவையில் விவாதிக்குமாறு திமுக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அது குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கவில்லை. எனினும் கிரண்பேடி தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்ததாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் தமிழகத்தை சீண்டும்விதமாக கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார். தமிழர்களின் மனம் பாதிக்கும் வகையில் தான் ட்வீட் செய்யவில்லை என கூறிவிட்டு தமிழக அரசை தற்போது வம்பிழுத்துள்ளார்.
புதுவையில்
அவர் கூறுகையில் தமிழகத்தில் உள்ள எந்த அணையிலிருந்தும் புதுவைக்கு தண்ணீர் வருவதில்லை. நீர் நிலைகள் தூர்வாரப்பட்டதால் தமிழகத்திற்கு கொடுக்கும் அளவுக்கு புதுவையில் தண்ணீர் இருக்கிறது. ஓராண்டில் பெய்த மழை தண்ணீரை சேர்த்துவைத்ததால் மட்டுமே புதுச்சேரியில் தண்ணீர் பிரச்னை இல்லை என தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு குடைச்சல்
ஆரம்பத்திலிருந்தே கிரண்பேடி, நாராயணசாமிக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனையே கடிப்பது போல், கிரண்பேடி நாராயணசாமியை விமர்சனம் செய்த நிலையில் தற்போது கூட்டணி கட்சியான அதிமுகவையே விமர்சனம் செய்துள்ளது பாஜகவுக்கு பெரும் குடைச்சலை அளித்துள்ளது.
வட்டாரங்கள்
எனவே எதிர்க்கட்சிகளின் பிரச்சனையை சமாளிக்க கிரண்பேடியை வேறு மாநிலத்துக்கு ஆளுநராக மாற்ற பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. இல்லாவிட்டால் வேறு ஒரு முக்கிய பதவியை அளிக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.