ரபேல் விவகாரத்தால் கோவா முதல்வர் பாரிக்கர் உயிருக்கு ஆபத்து.. கூடுதல் பாதுகாப்பு கேட்கிறது காங்.
டெல்லி: ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரம் வெளியே வந்து விடாமல் இருப்பதற்காக, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை கொலை செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறி, அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க அம்மாநில காங்கிரஸ் கட்சி, குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. சமீபத்தில் லோக்சபாவில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, ரபேல் விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக மீண்டும், குற்றம் சாட்டினார்.
மேலும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், தற்போதைய கோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான மனோகர் பாரிக்கர் வீட்டு படுக்கை அறையில் ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான பல உண்மை தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அப்போது ராகுல் காந்தி குற்றம் சாட்டிப் பேசினார்.
இதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, கடந்த செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், ஒரு ஆடியோ டேப் வெளியிட்டார். அந்த ஆடியோ டேப்பில் கோவா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே, பேசுவது போன்ற பேச்சு ஒலி இடம் பெற்றிருந்தது.
அதில், கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது முதல்வர் மனோகர் பாரிக்கர், ரபேல் விவகாரம் குறித்து பேசியதாகவும், அதை அனைத்து அமைச்சர்களும் கேட்டதாகவும், குறிப்பாக தனது படுக்கை அறையில் அனைத்து ஆவணங்களும் இருப்பதாக மனோகர் பாரிக்கர் கூறியதாகக் கூறுவது போல பேச்சு இடம் பெற்றிருந்தது.
Letter to @rashtrapatibhvn for enhancing security cover to @manoharparrikar as there is possible threat & attempts can be made to obtain Rafale files from @goacm bedroom in view of VishwajeetRane #RafaleAudioLeak
— Girish Chodankar (@girishgoa) January 5, 2019
@INCIndia
@INCGoa pic.twitter.com/1r4KjeIFAo
இந்த நிலையில் ரபேல் விவகாரத்தை முன்வைத்து பிரதமர் நரேந்திரமோடியை மனோகர் பாரிக்கர், பிளாக் மெயில், செய்ததாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு சுமத்தி இருந்தார்.
இவ்வாறு மனோகர் பாரிக்கரை சுற்றி ரபேல் விவகாரம் சுற்றி வரும், இந்த சூழ்நிலையில் கோவா மாநில, காங்கிரஸ் கமிட்டி சார்பில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு, ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில். ரபேல், கொள்முதல் விவகாரம் தொடர்பான உண்மை வெளி வந்து விடக் கூடாது என்பதற்காக, மனோகர் பாரிக்கரை, சிலர், கொலை செய்யும் வாய்ப்பு இருப்பதால், அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.