'ரியல் மகாராஜா'.. பஞ்சாப் டூ துபாய்.. ஏர் இந்தியா விமானத்தில் ஒற்றை பயணியாக பறந்த பஞ்சாப் தொழிலதிபர்
டெல்லி: பஞ்சாப் அமிர்தசரஸில் இருந்து துபாய்க்கு இயக்கப்பட்ட விமானத்தில் ஒரே ஒரு தொழிலதிபர் மட்டுமே தன்னந்தனியாக பயணித்துள்ள விநோத சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாகவே மிக மோசமாக இருந்தது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்குத் தடை விதித்தன.
தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், சில நாடுகள் இந்தியாவில் இருந்து வருபவர்களைக் கட்டுப்பாடுகளுடன் அனுமதித்து வருகின்றனர்.
ஏன் அப்போ தெரியலையா உங்களுக்கு.. திமுகவின் சாயம் வெளுத்திடுச்சி பாருங்க.. அன்புமணி பொளேர்
போக்குவரத்து தடை
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அமீரகம் இந்தியர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்று. கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி முதல் இரு நாடுகளுக்கும் இடையேயான விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஐக்கிய அமீரகம் வரும் ஜூவை 21ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் உள்ள தூதர்கள், ஐக்கிய அமீரகத்தில் சிறப்பு விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் அந்நாடு தற்போது அனுமதி அளித்துள்ளது.
ஒரே ஒரு நபர்
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து துபாய்க்கு இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் பயணித்த விநோத சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாபின் அமிர்தசரஸில் இருந்து இயக்கப்பட்ட ஏர் இந்தியா சிறப்பு விமானத்தில் எஸ் பி சிங் ஓபராய் என்ற பஞ்சாப் தொழிலதிபர் மட்டும் பயணித்துள்ளார். இவர் ஐக்கிய அமீரகத்தில் உள்ள முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர்.
ரியல் மகாராஜா
இந்த மூன்று மணி நேரப் பயணத்தில் முதலில் தான் ஒரு மகாராஜாவைப் போல உணர்ந்ததாகத் தெரிவித்தார். இருப்பினும், சற்று நேரத்திலேயே யாரும் இல்லாததால் போர் அடிக்க தொடங்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த பயணம் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்ததாகவும் இதற்காக இந்திய அரசுக்கும் ஐக்கிய அமீரக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
ஏர் இந்தியா
ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்ததால் முதலில் இவரது டிக்கெட்டை ரத்து செய்ய ஏர் இந்தியா முடிவு செய்தது. ஆனால், பின்னர் மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் தலையீட்டைத் தொடர்ந்து அவருக்கென தனியாக விமானத்தை இயக்க ஏர் இந்தியா ஒப்புக் கொண்டது. தன்னிடம் தடுப்பூசி போட்டதற்கான சான்று உள்ளிட்ட அனைத்து தேவையான சான்றிதழ்களும் இருந்ததாக எஸ் பி சிங் ஓபராய் குறிப்பிட்டார்
கோல்டன் விசா
எஸ் பி சிங் ஓபராய் ஐக்கிய அமீரகத்தில் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகிறார். ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வைத்திருப்பவர்களில் ஒருவர்தான் எஸ் பி சிங். சர்வதேச பிரபலங்கள் முக்கிய தொழிலதிபர்கள் ஆகியோருக்கு மட்டுமே ஐக்கிய அமீரகம் கோல்டன் விசாவை வழங்கும். இந்த கோல்டன் விசா 10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.