யு.என். தேபர், பரூவா.. இவங்களை தெரியுமா? ஆமாங்க.. காங். அகில இந்திய தலைவர்களாக இருந்தவர்கள்தான்!
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர்தான் வரவேண்டும் என்று ராகுலைத் தொடர்ந்து பிரியங்கா காந்தியும் வலியுறுத்தி இருக்கிறார். இதனால் காங்கிரஸ் கட்சியின் அடுத்த அகில இந்திய தலைவர் யாராக இருக்கும் என்கிற விவாதங்கள் களைகட்டி இருக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் முகங்கள் என்றாலே நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என்றுதான் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்திய காமராஜர், நிஜலிங்கப்பா போன்ற பெருந்தலைவர்களும் ஒருகாலத்தில் காங்கிரஸ் முகங்களாக இருந்தனர் என்பதாகிவிட்டது வரலாறு.
நாடு விடுதலைக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் காஷ்மீர் முதல் குமரி வரை எண்ணற்ற தலைவர்கள் இருந்தனர். அவர்களில் அதாவது பத்தோடு பதினொன்றாக ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேருவும் இருந்தார். அந்த வகையில் 1919-ம் ஆண்டு மோதிலால் நேரு காங்கிரஸ் தலைவராக இருந்தார். அதன்பின்னர் 1928-ல் 2வது முறையாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக மோதிலால் நேரு பதவி வகித்தார்.
தலைவராக நேரு
இதற்கு அடுத்துதான் காங்கிரஸ் கட்சி மெல்ல மெல்ல நேரு குடும்பத்தின் முகமாக உருமாற தொடங்கியது. மோதிலால் நேருவின் செல்வாக்கால் அவரது மகன் ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தலையெடுத்தார். நாடு விடுதலைக்கு முன்னர் 5 முறை காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தார் ஜவஹர்லால் நேரு. அவரது காலகட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திர போஸ், ராஜேந்திர பிரசாத், கிருபாளினி போன்ற ஆளுமைகள் காங்கிரஸின் முகங்களாகவும் திகழ்ந்தனர்.
நேரு குடும்பம் அல்லாத தலைவர்கள்
நாடு விடுதலைக்குப் பின்னர் ஜவஹர்லால் நேருவே நாட்டின் முதல் பிரமதரானார். ஆனால் அப்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ஜேபி கிருபாளினி (1947) பதவி வகித்தார். 1948, 1949களில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பட்டாபி சீதாராமைய்யா இருந்தார். அவர்தான் இந்த நாடு மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பதில் படுமுனைப்பாக இருந்தவர். 1950-ம் ஆண்டு முதல் 1959-ம் ஆண்டு வரை கூட நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் தலைவராக இருந்தது இல்லை. அப்போது புருஷோத்தம் தாஸ் டாண்டன் (1950), யு.என். தெபார் (1955-59) ஆகியோர்தான் தலைவர்களாக இருந்தனர்.
இந்திராவும் காங்கிரஸும்
1929-ல் மோதிலால் நேருவால் ஜவஹர்லால் நேரு காங்கிரஸில் தலையெடுத்தார். சுமார் 30 ஆண்டுகள் கழித்து ஜவஹர்லால் நேருவின் மகள் இந்திரா காங்கிரஸ் கட்சியில் தலையெடுக்க தொடங்கினார். ஆனால் இந்திராவின் நுழைவை மூத்த தலைவர்கள் பலரும் அவ்வளவு எளிதாக ஏற்கவில்லை. நீலம் சஞ்சீவ ரெட்டி (1960-63), காமராஜர் (1964-67) ஆகியோர் காங்கிரஸ் தலைவர்களாக பதவி வகித்தனர். 1967-l காமராஜரின் ராஜதந்திரத்தால் இந்திரா காந்தி பிரதமராக்கப்பட்டார். ஆனால் அப்போது காங்கிரஸில் உச்சகட்ட குழப்பம் உருவானது. காங்கிரஸ் தலைவராக 1968,69-ல் நிஜலிங்கப்பா இருந்தார். 1969-ல் காங்கிரஸ் கட்சியே இரண்டாக பிளவுபட்டது. காங்கிரஸ் (இந்திரா), காங்கிரஸ்( சிண்டிகேட்-ஸ்தாபன காங்) என இரண்டாக உடைந்தது அக்கட்சி.
இவர்களும் தலைவர்கள்
1970,71-ல் ஜெகஜீவன் ராம், 1972-74-ல் சங்கர் தயா ஷர்மா, 1975-77-ல் பரூவா ஆகியோர் காங்கிரஸில் பெயரளவுக்கான அகில இந்திய தலைவர்களாக இருந்தனர். இந்திரா காந்தி மீதான விசுவாசத்தைக் காட்ட பரூவா முன்வைத்த முழக்கம்தான், இந்தியா என்றால் இந்திரா; இந்திரா என்றால் இந்தியா என்பது. 1980களுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி முற்று முழுதாக இந்திரா காந்தி குடும்பத்தின் பிடியில் போனது. 1978 முதல் 1984-ல் இந்திரா படுகொலை செய்யப்படும் வரை அவர்தான் காங்கிரஸ் தலைவர். 1985 முதல் 1991-ம் ஆண்டு வரை இந்திரா காந்தி மகன் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படும் வரை அவரே காங்கிரஸ் தலைவராக இருந்தார்.
இந்திராவும் ராஜீவ் காந்தியும்
1991-க்குப் பின்னர் ராஜீவ் காந்தி மனைவி சோனியா காந்தி கட்சித் தலைவர் பதவியை ஏற்க மறுத்ததால் நரசிம்மராவ், சீதாராம் கேசரி ஆகியோர் பெயருக்கு தலைவர்களாக இருந்தனர். ஆனால் அதிகார மையமாக சோனியா காந்திதான் அப்போது இருந்தார். 1996-ல் வெளிப்படையாக நேரடியான அரசியலுக்கே வந்தார் சோனியா. காங்கிரஸ் கட்சித் தலைவரான சோனியா காந்தி 1998-ம் ஆண்டு முதல் 2017 வரை அப்பதவியை வகித்தார்.
Recommended Video
சோனியா, ராகுல், சோனியா
2017-ம் ஆண்டு முதல் 2019 வரை சோனியா காந்தி மகன் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்தார். ஆனால் 2019 லோக்சபா தேர்தலில் படுதோல்வியை காங்கிரஸ் கட்சி சந்தித்ததால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சோனியா காந்தி மீண்டும் இடைக்கால தலைவரானார். இப்போது மீண்டும் நேரு குடும்பத்தைச் சேராத வலிமையான தலைவர் ஒருவருக்காக காங்கிரஸ் கட்சி வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறது.