ஆக. 5ல் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா.. மோடியுடன் அயோத்தி பயணிக்கிறார் அத்வானி
டெல்லி: அயோத்தி கோயிலையும், பாஜக மூத்த தலைவர் அத்வானியையும் பிரித்து பார்க்க முடியாது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக தேசிய அளவில் ஆரம்பத்தில் இவர் ரத யாத்திரை மேற்கொண்டு இருந்தார். இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்கும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இவருடன் பாஜக மூத்த தலைவர் அத்வானியும் கலந்து கொள்கிறார்.
அடிக்கல் நாட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் ஸ்ரீராம் ஜெனமபூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு துவக்கியுள்ளது. அயோத்தியில் கோயில் கட்டுவதற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் 300 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த 1990ஆம் ஆண்டில் பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அத்வானி அயோத்தியில் கோயில் கட்டுவதை வலியுறுத்தி ரத யாத்திரை துவக்கினார். இந்த ரத யாத்திரைக்கு விஷ்வ இந்து பரிஷத், சங்பரிவார் ஆதரவு தெரிவித்து இருந்தது. 1990 ஆம் ஆண்டில், செப்டம்பர் 25 ஆம் தேதி இந்த யாத்திரையை சோம்நாத்தில் இருந்து துவக்கி டெல்லியில் முடித்தார். இந்த யாத்திரை பீகார் வழியாக செல்லும்போது கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்ய அப்போது முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த யாத்திரை முடிந்து அயோத்தியை அடைந்தபோதுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது எழுந்த மோதலில் 20 பேர் உயிரிழந்தனர். கரசேவை முடிந்த பின்னர் பாஜக தலைவர்கள் உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் பேச்சுதான் மசூதியை இடிக்கத் தூண்டுவதாக இருந்தது என்று குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
அயோத்தியில் ராமர் கோயில்... வெள்ளி செங்கற்கள் ரெடி... 3 நாட்கள் பிரம்மாண்ட பூஜை!!
இது தேசம் முழுவதும் எதிரொலித்து வன்முறையாக மாறியது. மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டது.
இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 5ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. அப்போது டெல்லியில் இருந்து பிரதமர் மோடியுடன் அத்வானியும் செல்வார் என்று கூறப்படுகிறது.