ராம ஜென்ம பூமி இயக்கத்தின் மீதான எனது நம்பிக்கையை நிரூபிக்கும் தீர்ப்பு இது.. அத்வானி கருத்து
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை முழுமனதாக வரவேற்கிறேன் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் ரத யாத்திரை சென்றவர் அத்வானி.
இந்த நிலையில்தான், 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அத்வானி உள்ளிட்டோர் கரசேவகர்களை தூண்டுவது போல உரையாற்றியதும், பேரணிகளும்தான்,பாபர் மசூதி இடிக்கப்பட காரணம் என்றும், இதன் பின்னணியில் அத்வானி உள்ளிட்டோரின் சதித்திட்டம் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில்தான் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் பாபர் மசூதியை இடிக்க முயன்ற சமூக விரோதிகளை அங்கிருந்த தலைவர்கள் தடுக்க முற்பட்டு உள்ளனரே தவிர, சதித்திட்டம் செய்யவில்லை. எனவே குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கைகளில் தனது வீட்டில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பங்கேற்றார் அத்வானி. அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாபர் மசூதி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நான் முழுமனதோடு வரவேற்கிறேன்.
ராமர் ஜென்மபூமி இயக்கம் தொடர்பான எனது தனிப்பட்ட மற்றும் பாஜகவின் நம்பிக்கையையும் அர்ப்பணிப்பையும் இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இவ்வாறு அத்வானி தெரிவித்தார்.
பாபர் மசூதியை இடிக்க முற்பட்டது சமூக விரோதிகள்.. தீர்ப்பில் தெரிவித்த நீதிபதி
அதேபோல முரளி மனோகர் ஜோஷி தனது இல்லத்தில் வழக்கறிஞருக்கு லட்டு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்ததோடு தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். முன்னதாக தீர்ப்பு வெளியானதும் அத்வானியின் இல்லத்திற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வருகைதந்து அத்வானியிடம் ஆசி பெற்றுச் சென்றார்.