இஎம்ஐ செலுத்த மேலும் 2 ஆண்டுகாலம் அவகாசம் தர முடியும் - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு,ஆர்பிஐ தகவல்
இ.எம்.ஐ அவகாசத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளன.
டெல்லி: இஎம்ஐ கடன் தவணையை செலுத்த 2 ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்க முடியும் என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன. சொலிசிட்டர் ஜெனரல் இந்த தகவலை கூறியுள்ள நிலையில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் ரிசர்வ் வங்கி முறைக்கு நாளை உரிய முடிவு எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வங்கி தவணை அவகாசம் நேற்றுடன் முடிவடைந்துள்ள இ.எம்.ஐ கட்ட மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் வழங்க முடியும் என மத்திய அரசு கூறியுள்ளது.
கொரானா நோய்த்தொற்று காரணமாக மத்திய அரசு, நாடு முழுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர். தொழிற்சாலைகள், நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள் என அனைத்தும் ஸ்தம்பித்துள்ளது.
ஏராளமானோர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். நடுத்தரக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்கள் சாதாரண வாழ்கையை கூட நெருக்கடியுடன் கொண்டு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்கள் வாழ்வாதாரம் இன்றி உணவுக்கே, கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதில், கடனுக்கான இஎம்ஐ செலுத்துவது மற்றொரு பாரமாக மாறியது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் மாதம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை செலுத்துவோருக்கு மூன்று மாதம் காலநீட்டிப்பு தரப்பட்டது. அதாவது, அந்த மூன்று மாதமும் அவர்கள் கடன் செலுத்த தேவையில்லை. அதற்குப் பிறகு செலுத்த ஆரம்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஊரடங்கு நீடிப்பு மற்றும் தொழில்கள் வளர்ச்சி பெறாத காரணத்தால் மறுபடியும் கால நீட்டிப்பு செய்து ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கடன் ஒத்திவைப்பு சலுகை தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்தியாதான் லடாக்கில் அத்துமீறுகிறது.. விரைவில் உரிய நடவடிக்கை எடுப்போம்.. சீனா பாய்ச்சல்!
அதே நேரத்தில் ஒத்திவைக்கப்படும் காலத்தில் செலுத்தவேண்டிய நிலுவை தொகைக்கு வட்டியை வசூலித்தது வங்கிகள் மற்றும் கடன் அளிக்கும் நிறுவனங்கள். ஏற்கனவே பண பிரச்சனையில் சிக்கியுள்ள மக்கள் வட்டியை சேர்த்து கட்ட வேண்டுமா என்று யோசித்து அதற்கு பதிலாக வழக்கம்போலவே இஎம்ஐ கட்டி விடுகிறோம் என்ற முடிவுக்கு வந்தனர். இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் பல தொடரப்பட்டன.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் பதிலை கேட்டிருந்தது. வழக்கு விசாரணை கடந்த வாரம் மறுபடியும் நீதிமன்றம் வந்தபோது, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததற்கு, நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார்.
மத்திய அரசுக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த விஷயத்தில் முடிவெடுப்பதற்கு ஏகப்பட்ட அதிகாரம் உள்ளது. அந்த சட்டத்தைப் பயன்படுத்தி இஎம்ஐ தள்ளுபடி அல்லது காலக்கெடு நீட்டிப்பு மற்றும் இஎம்ஐ தொகை மீதான வட்டி வசூலிப்பதை தடை செய்வது உள்ளிட்ட முடிவுகளை மத்திய அரசு எடுக்க முடியும்.
வட்டிக்கு வட்டி போடும் இந்த நிலைமையை மாற்ற முடியும். ஆனால் மத்திய அரசு அதை செய்யவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி இன்னும் ஒரு வாரத்திற்குள் தனது பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு வட்டி தள்ளுபடி செய்யப்படுவது, வட்டிக்கு வட்டி போட்டு நிறுத்தப்படுவது என்பது பற்றியெல்லாம் உச்ச நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும். இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணை செப்டம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாசிடம் வங்கியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். அதில் வங்கி கடனை திருப்பி செலுத்த இனியும் கால அவகாசம் வழங்கினால், கடனை திருப்பி செலுத்துவதில் சிறமம் ஏற்படும் எனவும், இந்த சூழலை பயன்படுத்தி பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
இதனால், இந்த மாதத்தில் இருந்து, கடனை திருப்பி செலுத்தும் முறை பழய நிலமைக்கு செல்லும் எனவும், தவணை அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருக்காது எனவும் தகவல் வெளியானது. இந்த மத்திய அரசு இன்று தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இ.எம்.ஐ கட்ட 2 ஆண்டுகள் அவகாசம் வழங்க முடியும் என ஆர்.பி.ஐ-க்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
கொரோனா பேரிடரில் இருந்து இனியும் மீண்டுவராத நிலையில் வங்கி கடன் தவணை அவகாசத்தை நீட்டிக்காமல் இருப்பது மக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேக்தா உச்சநீதிமன்றத்தில் பிரமாணபத்திரத்தை தாக்கல் செய்தார், அதில் இஎம்ஐ கால அவகாசத்தை இரண்டு ஆண்டுகள் நீடிக்க முடியும் என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ரிசர்வ் வங்கியின் வட்டி மீது வட்டி போடும் நடைமுறைக்கு நாளை உரிய முடிவு எடுக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.