இஎம்ஐ வட்டிக்கு வட்டி வசூல் : மத்திய அரசு முடிவெடுக்க 2 வாரம் அவகாசம் அளித்த உச்சநீதிமன்றம்
இஎம்ஐ வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் மேலும் அவகாசம் அளித்துள்ளது.
டெல்லி: இஎம்ஐ வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் மேலும் அவகாசம் அளித்துள்ளது. வழக்கின் விசாரணையை செப்டம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்று முதல் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் வழக்கை ஒத்திவைக்க கோரக்கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஆறு மாத காலத்திற்கு இஎம்ஐ கடன் தொகையை செலுத்தாதவர்களின் கணக்குகளை மறு உத்தரவு வரும் வரை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கொரானா நோய்த்தொற்று காரணமாக மத்திய அரசு, நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் தளர்வுகள் இல்லாத லாக்டவுனை அமல்படுத்தியது. இதனால் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர். தொழிற்சாலைகள், நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள் என அனைத்தும் ஸ்தம்பித்தது. பலருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.
நடுத்தரக் குடும்பங்களை சேர்ந்தவர்களும் வாழ்வாதாரம் இன்றி உணவுக்கே, கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதில், கடனுக்கான இஎம்ஐ செலுத்துவது மற்றொரு பாரமாக மாறியது. இந்த சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் மாதம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. இஎம்ஐ செலுத்துவதற்கும் வீடு, கார், உள்ளிட்ட வங்கிக்கடன்களை செலுத்துவோருக்கு மூன்று மாதம் காலநீட்டிப்பு தரப்பட்டது. அதாவது, அந்த மூன்று மாதமும் அவர்கள் கடன் செலுத்த தேவையில்லை. அதற்குப் பிறகு செலுத்த ஆரம்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் வேலைக்கு செல்ல முடியவில்லை. வருமானம் இல்லாத காரணத்தால் மறுபடியும் கால நீட்டிப்பு செய்து ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கடன் ஒத்திவைப்பு சலுகை தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
அதே நேரத்தில் ஒத்திவைக்கப்படும் காலத்தில் செலுத்தவேண்டிய நிலுவை தொகைக்கு வட்டி மேல் வட்டி போட்டு வங்கிகள் மற்றும் கடன் அளிக்கும் நிறுவனங்கள் வசூலித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் பல தொடரப்பட்டன.
இரண்டு பக்கமும் ஜாகுவார், சுகோய்.. நடுவில் சீறிய ரபேல்.. "ஷோ" காட்டிய இந்தியா..சீனாவிற்கு செம மெசேஜ்
அந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, அசோக் பூஷன் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, மத்திய அரசுக்கு எதிராக கடும் அதிருப்தியை தெரிவித்தது. மத்திய அரசுக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த விஷயத்தில் முடிவெடுப்பதற்கு ஏகப்பட்ட அதிகாரம் உள்ளது. அந்த சட்டத்தைப் பயன்படுத்தி இஎம்ஐ தள்ளுபடி அல்லது காலக்கெடு நீட்டிப்பு மற்றும் இஎம்ஐ தொகை மீதான வட்டி வசூலிப்பதை தடை செய்வது உள்ளிட்ட முடிவுகளை மத்திய அரசு எடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் நடைபெற்ற போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டி செலுத்தும் நடைமுறையை ரத்து செய்ய முடியாது என்றும் கடனை செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை வலுவிழக்கும் வகையில் முடிவெடுக்க முடியாது எனவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், எல்லா துறையிலும் பாதிப்பு இருப்பதாகவும் ஆகஸ்ட் 31 வரை இஎம்ஐ கட்டாதோர் கடனை செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்படாது என்றும் செப்டம்பர் 6 ஆம் தேதி துறை ரீதியான குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இஎம்ஐ கடன் தொகையை செலுத்தாதவர்களின் கணக்குகளை மறு உத்தரவு வரும் வரை வராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என உத்தரவிட்டனர். வட்டி மேல் வட்டி போடுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை செப்டம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இஎம்ஐ வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்க அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையை செப்டம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்று முதல் தொடர்ந்து நடைபெறும் என்றும் மேலும் அவகாசம் கேட்கக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஆறு மாத காலத்திற்கு இஎம்ஐ கடன் தொகையை செலுத்தாதவர்களின் கணக்குகளை மறு உத்தரவு வரும் வரை வராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.