குறைந்த வட்டியில் கடன்.. அதிக கொள்முதல் விலை நிர்ணயம்.. விவசாயிகளுக்கு மத்திய அரசு செம அறிவிப்பு!
டெல்லி: ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடனுக்கு 4 சதவீத வட்டி அடிப்படையில் கடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
நாடு முழுக்க கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் ஊரடங்கு உள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பொருளாதார நிலை குறித்து இன்று பிரதமர் மோடி மத்திய அமைச்சரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார் .
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின் இன்று அமைச்சரவை கூட்டம் நடத்தினார். பொருளாதார சரிவு குறித்து இதில் முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டது.மத்திய அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அமைச்சர்கள் நிதின் கட்கரி, நரேந்திர சிங் தோமர் ஆகியோர் பேட்டி அளித்தனர்.
இவர்கள் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டனர். அதில், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.மக்காச்சோளம், துவரம் பருப்பு, பாசிப் பயிறு உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும்.
சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு நிவாரண சலுகைகள்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறுகுறு நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிட உதவிகள் செய்யப்படும். விவசாயிகளுக்கு 50% முதல் 83% வரை குவிண்டாலுக்கு அதிகமாக விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க மத்திய அரசு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடனுக்கு 4 சதவீத வட்டி அடிப்படையில் கடன் வழங்கப்படும், என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர் .