தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா.. நாளை காலை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி; தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது . தி.மு.க. தொடர்ந்திருந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு மட்டும் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. நகர உள்ளாட்சிப் பகுதிகளுக்குப் பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் வார்டுகள் மறுவரையறை முடிவடையாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது; உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இம்மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் மாவட்ட பிரிப்புகள் குறித்து உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. மேலும் திமுக தரப்பில் உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆனால் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரோ, 5 மாவட்டங்கள் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க முடியும். ஒட்டுமொத்தமாக உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என வாதிட்டார்.
இதனை நிராகரித்த திமுக வழக்கறிஞர், 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைத்தால் குழப்பம் ஏற்படும் என சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை நிறுத்த முடியுமா? என பிற்பகல் 2 மணிக்குள் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் நடைபெற்ற விசாரணையின் போது, 37 மாவட்டங்களில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து எஞ்சிய மாவட்டங்களில் தேர்தலை நடத்த தயார் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் பதிலளித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கில் நாளை காலை தீர்ப்பு வழங்குவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.