UNLOCK 1.0: நாளை முதல் நாடு முழுவதும் புது தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு.. என்னென்ன தளர்வுகள்?
டெல்லி: இந்தியா முழுவதும் லாக்டவுன் 4.0 இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் நாளை முதல் நாடு முழுவதும் புது தளர்வுகளுடன் கொரோனாவை தடுக்கும் 5ஆவது கட்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
Recommended Video
கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் அமலில் உள்ள லாக்டவுன் 4.0 இன்றுடன் முடிவடைகிறது. இந்த ஊரடங்கு தொடங்கப்பட்ட போதே பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அளித்தது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருக்கிறது.
இதனால் லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாளை முதல் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் மட்டும் இந்தியா முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
லாக்டவுன் 5.0.. கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜுன் 30 வரை ஊரடங்கு.. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
மூன்று நிலைகள்
பொருளாதார முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு முதற்கட்டமாக நோய் கட்டுப்பாடு அதிகம் இல்லாத பகுதிகளில் அனைத்தும் இயங்கும் வகையில் புதிய தளர்வுகளுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. இது தொடர்பாக மூன்று நிலைகளாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஹோட்டல்கள்
அதன்படி மதவழிப்பாட்டு தளங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்டுகள், ஷாப்பிங் மால்கள் வரும் ஜூன் 8-ஆம் தேதி முதல் திறக்கப்படும். சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்களை திறப்பது குறித்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு பின்னர் முடிவு எடுக்கப்படும். இதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்களை தொடங்குவதற்கான முடிவுகள் ஜூலை மாதம் எடுக்கப்படும்.
பூங்காக்கள்
புதிய வழிகாட்டும் நெறிமுறைகளின்படி நாளை முதல் சில நடவடிக்கைகளுக்கு மட்டுமே தடை தொடர்ந்துள்ளது. அவை சர்வதேச விமான பயணம், மெட்ரோ ரயில்இயக்கம், சினிமா தியேட்டர்கள், ஜிம் எனப்படும் உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், பார்கள், ஆடிடோரியங்கள், சமூக, அரசியல், விளையாட்டு, மதம் ஆகியவை தொடர்பான கூட்டங்கள் ஆகியவற்றுக்கு தடை தொடரும்.
மத்திய அரசு
மூன்றாவது கட்டமாக மேற்கண்ட நடவடிக்கைகளை மீண்டும் இயங்க அனுமதிப்பது குறித்து சூழலை ஆராய்ந்த பிறகே முடிவு செய்யப்படும். நோய் கட்டுப்பாடு பகுதிகளில் லாக்டவுன் கடுமையாக அமல்படுத்தப்படும். இந்த சேவைகள் அனைத்தும் மத்திய மாநில அரசுகள் ஆலோசனை நடத்திய பிறகே இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டுப்பாடுகள்
இரவு ஊரடங்கிலும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அதாவது இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தனிநபர் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அதில் தளர்வு கொடுத்து அந்த நேரத்தை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை என தளர்வு எடுத்துள்ளது. 65 வயதை கடந்தோர், உடல்நிலை பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்கும் குறைவாக உள்ள குழந்தைகள் அவசியம் ஏற்பட்டாலொழிய வீட்டை விட்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.