"பாஜக பரப்பும் வைரஸ்".. எல்லோரும் சேர்ந்து கொரோனாவை விரட்ட வேண்டிய நேரத்தில்.. சோனியா அதிரடி ஆவேசம்
வெறுப்பு அரசியல் செய்கிறது பாஜக என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்
டெல்லி: கொரோனாவுக்கு எதிராக பாஜக வெறுப்பு அரசியல் செய்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதற்கு முன்பு இப்படியெல்லாம் சோனியா பேசியதே இல்லை.. பாஜக வகுப்புவாத வெறுப்புணர்வு வைரஸை பரப்புகிறது என "பாஜக வைரஸ்" என்கிற ரீதியில் காட்டமான கருத்துக்களை முன் வைத்துள்ளது பெரும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.
லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.. லாக்டவுன் அறிவிப்பு திடுதிப்பென வந்தபோது ஏராளமான தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து நடந்து சென்றபோதே சோனியா காந்தி மிகுந்த வருத்தத்தினை பதிவு செய்திருந்தார்.
லாக்டவுன் போடப்பட்டது என்னவோ சரிதான், ஆனால் சரியாக பிளான் பண்ணப்படவில்லை என்றும் ஏழை தொழிலாளர்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
ஆதங்கம்
ஆனால் அப்போது சோனியா காந்தி மத்திய அரசை விமர்சித்ததற்கும் இப்போது பேசியதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.. உச்சக்கட்ட ஆதங்கத்தில் உள்ளார். காங்கிரஸ் கட்சி காரியக் கமிட்டி கூட்டத்தில் அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்:
வெறுப்பு அரசியல்
"கடந்த மூன்று வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.. இந்த சமயத்திலும் மத்திய அரசுக்கு சொன்ன யோசனைகள் யாவும் ஏற்கப்படவில்லை.. பாஜக, மத வெறுப்பு வைரஸைப் பரப்பி வருகிறது. இந்த போக்கு ஒவ்வொரு இந்தியனுக்கும் கவலையை தர வேண்டும்... நாம் எல்லாரும் கொரோனா வைரஸை ஒன்றாக எதிர்கொள்ள வேண்டிய இந்த சமயத்தில், பாஜக அரசு இதுபோல் நடந்து வருவது வேதனையாக உள்ளது. நமது சமூக நல்லிணக்கத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை சரி செய்ய எங்களுடைய கட்சி கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கிறது.
வைரஸ்
நமது சமூக நல்லிணக்கத்துக்கு மிக பெரிய பாதிப்பு செய்யப்பட்டு வருகிறது... நாம்தான் அதை சரி செய்ய தொடர்ந்து செயல்பட வேண்டும்... லாக்டவுன் கொண்டுவரப்பட்டதில் இலிருந்து பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும், ஆக்கப்பூர்வான கூட்டுறவு கோரியும் பலமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன்... கொரோனா வைரஸ் போராட்டத்தில் ஒத்துழைப்பு கொடுப்பது பற்றி தெரிவித்துள்ளேன்... பலவித யோசனைகளையும் வழங்கி உள்ளேன்.
மோசமான வழி
ஆனால் அவை எதுவுமே பெரிசா எடுத்து கொள்ளப்படவில்லை. துரதிர்ஷ்டமாக அவர்கள் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைகளை பாதியளவுதான் ஏற்றார்கள், மற்றபடி மோசமான வழியில்தான் செல்கிறார்கள்... பாரபட்சமாக மிகவும் மோசமான முறையில் நடந்து கொள்கிறது. இரக்கம், பெருந்தன்மை, எதற்கும் உற்சாகமாக தயாராவது போன்றவை மத்திய அரசிடம் இருந்து வெளிப்படவில்லை... பாஜகவின் இந்த செயல் நாட்டின் ஒவ்வொரு இந்தியரையும் கவலையடைய செய்துள்ளது.
தொழிலாளர்கள்
முதல் கட்ட லாக்டவுனிலேயே 12 கோடி வேலைவாய்ப்புகள் பறிபோய்வி்ட்டன.. வைரஸை தடுக்கும் நோக்கில் போடப்பட்டுள்ள லாக்டவுன் நடவடிக்கையானது விவசாயிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் இப்படி பல தரப்பட்ட மக்களை அளவுக்கு அதிகமாகவே பாதித்து வருகிறது. வர்த்தக, வியாபார மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் முற்றிலும் முடங்கியுள்ளன.. இதனால் கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.... அவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது.
உணவு தானியங்கள்
ஒவ்வொருவரும் கொரோனாவை எதிர்த்து போராடுகிறார்கள், பாதுகாப்பு சாதனங்கள், டெஸ்ட் கிட்கள் நாட்டில் இப்போதுகூட பற்றாக்குறையாக இருக்கின்றன. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்துக்கு தலா ரூ.7,500 வழங்க வேண்டும்.. உணவு தானியங்கள் இன்னும் 11 கோடி மக்களை சென்றடையவே இல்லை. ஒவ்வொரு மாசமும் 11 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, அரை கிலோ சர்க்கரை வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு வழங்க வேண்டும்.
காட்டம்
ஊரடங்கின் தாக்கத்தை மென்மையாக்குவதில் அரசு இரக்கம் காட்ட தவறிவிட்டது.. மே 3-ம் தேதி லாக்டவுன் முடிகிறது.. இதற்கு பிறகு அதாவது மே 3-ம் தேதிக்கு பிறகு நிலைமையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து மத்திய அரசிடம் எந்தவித தெளிவான திட்டமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் அதன் விளைவுகளும் அபாயகரமானதாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.