மே 17ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிப்பு.. ஆனால் வேறு மாதிரி.. முதல்வர்களிடம் மோடி கூறியது என்ன?
டெல்லி: மே 17 ஆம் தேதிக்குப் பிறகும், நாட்டில் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்படும்.. ஆனால் அது வேறு மாதிரி இருக்கும் என்று முதல்வர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின்போது தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, மார்ச் மாதம் முதல் இதுவரை, மூன்று முறை நாடு முழுக்க லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மே 3ம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரை மூன்றாவது லாக்டவுன் காலகட்டத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆய்வு நடத்தினார். முதல்வர்கள் உடனான பிரதமரின் ஐந்தாவது ஆலோசனை கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தின்போது பிரதமர் சில முக்கியமான தகவல்களை தெரிவித்து உள்ளார்.
கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர் பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பதா? வைகோ எதிர்ப்பு
முதல்வர்கள் கருத்து
முன்னதாக, ஒவ்வொரு மாநில முதல்வர்களும் ஒவ்வொரு வகையான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர பிற மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகளை துவங்குவதற்கு அனுமதிக்கலாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆனால் கேட்ட உதவிகளை மத்திய அரசு, மாநிலங்களுக்கு தரவில்லை.. ஒரு பக்கம் லாக்டவுன் என்று சொல்லிக்கொண்டு, மறுபக்கம் ரயில் இயக்கத்தை மத்திய அரசு திறந்து விடுகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
கெடுபிடி தளர்வு
பெரும்பாலான மாநில அரசுகள் விதிமுறைகளின் தளர்வு வேண்டும் என்று கூறிய நிலையில், குஜராத் மாநில முதல்வர், கெடுபிடி நீடிக்கப்பட வேண்டும் என்றும், குஜராத்தில் எடுக்கவேண்டிய முடிவுகளை, மத்திய அரசு நேரடியாக கவனிக்கலாம் என்று அனுமதி வழங்கியுள்ளார். இதன் பிறகு பிரதமர் கூறும்போது, படிப்படியாக ஊரடங்கு கெடுபிடிகளை தளர்த்தலாம். தடுப்பூசி என்பது மட்டும்தான் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும். இப்போதைக்கு சமூக இடைவெளியை பராமரிப்பதுதான் மிகச்சிறந்த ஆயுதம்.
வைரசுடன் வாழ பழக வேண்டும்
உலகப் போருக்கு முன்பு மற்றும் பின்பு என மக்கள் வாழ்க்கை முறை மாறியது போல இந்த வைரஸ் பாதிப்பு பிறகு மக்கள் வாழ்க்கை முறை வேறு மாதிரி மாற வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. மக்கள், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் இந்த சமூகத்தில் வாழ பழகிக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார். மேலும், சில குறிப்பிட்ட நகரங்களைத் தவிர மற்ற பகுதிகளில் விதிமுறைகளை தளர்த்தலாம். கிராமப்புறங்களில் உள்ள மக்களிடம் வைரஸ் பரவாமல் தடுப்பது, வெளிநாடுகளில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டவர்கள் இங்கு புதிதாக நோய்களை ஏற்படுத்தி விடாமல் இருப்பதும் நமது முக்கியமான நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநிலங்களுக்கு அதிகாரம்
இம்முறை மாநிலங்களுக்கு, முடிவெடுக்க அதிக உரிமை கொடுத்து விடலாம். ஒவ்வொரு மாநிலமும் அவரவர் மாநிலத்தில் எந்த மாதிரி ஊரடங்கு விதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான அனுமதியை கொடுக்கலாம் என்பது பிரதமரின் திட்டமாக இருக்கிறது. எனவே பெயருக்கு மட்டும் லாக்டவுன். அதுவும் சில நகரங்களில் மட்டும். இதுதான் பிளான். பிற பகுதிகளில் பெருமளவு லாக்டவுன் தளர்வு தான் இருக்கும் என்று பிரதமர் மோடியின் பேச்சில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
மக்கள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
இதன் ஒரு பகுதியாகத்தான் ஜூன் 1ம் தேதி முதல், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளது பார்க்கப்படுகிறது. எனவே, சொன்னாலும், சொல்லாவிட்டாலும் மக்கள் வைரசோடு வாழ பழகி கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இந்த விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்தாக வேண்டும் என்பதை, இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.