வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்களவையில் அமளி.. தொடர்ந்து 4 முறை அவை ஒத்திவைப்பு
டெல்லி: புதிய வேளாண் சட்டங்கள் குறித்து தனியாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை தொடர்ந்து பல முறை ஒத்திவைக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உரையுடன் நாடாளுமன்றம் கடந்த 29-ஆம் தேதி கூடியது. பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இரு அவைகளிலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். கவுரவம் பார்க்காமல் 3 வேளாண் சட்டங்களையும் அரசு திரும்ப பெற வேண்டும். விவசாயிகளை எதிரிகளாக பாவிக்க வேண்டாம்.
விவசாயிகள்
விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறாததால் நாட்டிற்கு களங்கம் ஏற்படும் நிலை உள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. டெல்லியில் விவசாயிகள் போராடும் தளங்களில் ஆணிகள், சுவர்கள் எழுப்பி தடுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என சமாஜ்வாதி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ் தெரிவித்தார்.
கருணை
குடியரசு தினத்தன்று பேரணியில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு ரூ 20 லட்சம் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். கடுங்குளிர், பசி உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் உயிரை தியாகம் செய்துள்ள நிலையில் இந்த அரசோ அவர்கள் மீது கருணை காட்டாமல் கொடூரமாக நடந்து கொள்கிறது என்றார்.
மையப்பகுதி
இதையடுத்து எதிர்க்கட்சியினர் அனைவரும் அவையின் மையப்பகுதிக்கு வந்தனர். அப்போது இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார். அவையின் மாண்பை காக்க வேண்டும், இல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனாலும் அவர்கள் யாரும் கேட்காததால் அவை 4.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இரண்டாவது முறை
இதையடுத்து அவை மீண்டும் கூடிய போது வேளாண் சட்டங்கள் மீது தனி விவாதம் வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மீண்டும் அமளியால் அவை 5 மணி வரை இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து மோடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பு
அப்போது அனைவரையும் இருக்கைக்கு செல்லுமாறும் பூஜ்ஜிய நேரத்தை தொடங்க வேண்டும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். ஆனால் அவையில் கூச்சல் குழப்பம் நீடித்ததால் மூன்றாவது முறையாக இரவு 7 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து அவை மீண்டும் கூடிய நிலையில் மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் இரவு 9 மணி வரை அவையை ஒத்திவைத்தார் பிர்லா.