லோக்சபா தேர்தல்.. நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு.. உ.பி உட்பட 7 மாநிலங்களில் தேர்தல்!
டெல்லி: லோக்சபா தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 51 தொகுதிகளில் நாளை நடக்கிறது. இதில் உத்தர பிரதேசம் அதிக கவனம் பெறுகிறது. நாளை காலை 7 மணிக்கு இந்த வாக்குப்பதிவு தொடங்கும். மாலை 6 மணி வரை தேர்தல் நடக்கும்.
லோக்சபா தேர்தல் கொஞ்சம் கொஞ்சமாக முடிவை நெருங்கி வருகிறது . இது வரை நான்கு கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இது வரை 374 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இன்னும் 169 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில் நாளை ஐந்தாம் கட்டமாக 7 மாநிலங்களில் 51 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை நடந்த தேர்தலில் பெரிய அளவில் கலவரமோ, புகாரோ தெரிவிக்கப்படவில்லை. பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு அடைந்தது. தமிழகத்திலும் 18 சட்டசபை மற்றும் 38 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்தது.
நாளை மேற்கு வங்கத்தில் ஐந்தாவது கட்டமாக 7 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. அங்கு ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பீகாரில் 5 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. ராஜஸ்தானில் 12 இடங்களில் தேர்தல் நடக்கிறது.
காஷ்மீரில் 2 தொகுதியில் தேர்தல் நடக்கிறது. அங்கு தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடக்கிறது. மத்திய பிரதேசத்தில் 7 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இங்கு முக்கிய வேட்பாளர்கள் தேர்தலை சந்திக்கிறார்கள். ஜார்கண்டில் 4 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இங்கு ஐந்தாவது கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு ரேபரேலி, அமேதியில் தேர்தல் நடக்கிறது. இங்கு முக்கிய வேட்பாளர்கள் இன்று தேர்தலை சந்திக்கிறார்கள்.
ரேபரேலியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அங்கு அவரை பாஜக அமைச்சர் ஸ்மிதி இராணி எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தல் காரணமாக நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.