59 தொகுதிகளில் நாளை 7-ம் கட்ட வாக்குப் பதிவு.. மோடி, சத்ருகன் சின்ஹா உட்பட 912 வேட்பாளர்கள்
டெல்லி: லோக்சபா தேர்தலின் இறுதி கட்ட வாக்குப் பதிவு 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நாளை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட 912 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ளன.
7-வது கட்டமாக பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், பீகார், இமாச்சல், ஜார்க்கன்ட் மற்றும் சண்டிகரில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்காக 8 மாநிலங்களில் 1,12,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்றம், சிபிஐ, ஆர்பிஐ.. லேட்டஸ்ட் தேர்தல் ஆணையம்.. தன்னாட்சி அமைப்புகள் தடுமாற்றம் ஏன்?
10 கோடி வாக்காளர்கள்
மொத்தம் 10 கோடி வாக்காளர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர். பிரதமர் மோடி உட்பட 912 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பீகார் விஐபிக்கள்
பீகாரில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜகவில் இருந்து தாவிய சத்ருகன் சின்ஹாவை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் ராம் கிர்பால் யாதவ். லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமார் மற்றும் லாலுவின் மகள் மிசா பார்தி ஆகியோர் பீகார் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள்.
இமாச்சல், ஜார்க்கண்ட்
இமாச்சல பிரதேசத்தில் பாஜகவின் அனுராக் சிங் தாக்கூர், ராம் ஸ்ஸ்வரூப் ஷர்மா ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள். ஜார்க்கண்ட்டில் முன்னாள் முதல்வர் சிபுசோரன் மற்றும் பாஜகவின் நிஷிகாந்த் துபே ஆகியோர் களத்தில் இருக்கும் விஐபிக்கள்.
பிரதமர் மோடி
பஞ்சாப் மாநிலத்தில் சன்னி தியோல், மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர், காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, முன்னாள் முதல்வர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் களத்தில் உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி, போஜ்புரி நடிகர் ரவி கிஷான் உள்ளிட்டோர் விஐபி வேட்பாளர்கள். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் சுதீப் பண்டோபாத்யாயா, செளகதா ராய், அபிஷேக் பானர்ஜி, சுபாஷ் சந்திரபோஸின் உறவினரான சந்திரா குமார் போஸ் ஆகியோர் பிரதான வேட்பாளர்கள்.