ராகுல் அதிரடி திட்டம்.. ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன்களை ரத்து செய்ய பிளான்.. விரைவில் அறிவிப்பு!
லோக்சபா தேர்தலை முன்னிட்டு மாணவர்களின் கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய போவதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளிக்க முடிவெடுத்துள்ளது.
டெல்லி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு மாணவர்களின் கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய போவதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளிக்க முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
லோக்சபா தேர்தலுக்காக கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளிக்க பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி திட்டமிட்டு வருகிறது. இதற்காக வாக்குறுதி பட்டியலை தயாரிக்கும் பணியில் இப்போதே கட்சிகள் அனைத்தும் இறங்கிவிட்டது.
இந்த தேர்தல் முடிவில் விவசாயிகளும், வேலையில்லா இளைஞர்களும் அதிக மாற்றத்தை கொண்டு வருவார்கள், இவர்களின் வாக்குகள்தான் இந்த தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே காங்கிரஸ்
இதற்காக ஏற்கனவே காங்கிரஸ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால், இந்தியாவில் அனைவருக்கும் அடிப்படை குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும் என்று கூறியது. அதேபோல் விவசாய கடன்கள் நாடு முழுக்க தள்ளுபடி செய்யப்படும் என்றும் காங்கிரஸ் வாக்குறுதியில் தெரிவித்தது.
கல்விக்கடன் ரத்து
லோக்சபா தேர்தலை முன்னிட்டு மாணவர்களின் கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய போவதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளிக்க முடிவெடுத்துள்ளது. நேற்று காங்கிரஸ் கட்சி சார்பாக தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்கிறார்கள்.
நிறைய பேர்
இந்த தேர்தலில் இளம் வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இப்போதுதான் கல்லூரி முடித்துவிட்டு தேர்தலை சந்திக்கும் வாக்காளர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களில் பலர் கல்விக்கடன்களை கொண்டு இருப்பதால் இவர்களை கவரும் வகையில் இந்த வாக்குறுதி அளிக்கப்பட உள்ளது.
பல நாள் கோரிக்கை
மத்திய அரசின் புள்ளிவிவரத்தின்படி கடந்த 2018 டிசம்பர் வரை இந்தியாவில் மொத்தம் 69,100 கோடி ரூபாய் கல்விக்கடன் நிலுவையில் இருக்கிறது. இந்த கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பல நாட்களாக மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதனால் காங்கிரசின் இந்த வாக்குறுதி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.