அடுத்தடுத்து செய்யும் தவறுகள்.. ராகுல் காந்தி எதிர்காலத்தில் இதை நினைத்து வருத்தப்படுவார்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் தோல்வி அடையும் பட்சத்தில் கண்டிப்பாக சில முக்கியமான விஷயங்களை நினைத்து வருத்தப்படுவார்.
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் தோல்வி அடையும் பட்சத்தில் கண்டிப்பாக சில முக்கியமான விஷயங்களை, தப்பவிட்ட தருணங்களை நினைத்து வருத்தப்படுவார்.
லோக்சபா தேர்தலுக்கு தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சி கொஞ்சம் நன்றாகவே கூட்டணி அமைத்து இருக்கிறது. தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து இருக்கிறது. அதேபோல் கர்நாடகாவிலும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிகள் இதே போல வடஇந்தியாவில் பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை. பல்வேறு காரணங்களால் வடஇந்தியாவில் காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் திணறி வருகிறது.
சாஸ்திரி நினைவிடத்துக்கு பிரியங்கா வந்ததால் ஆச்சாரம்... கங்கை நீரை ஊற்றி கழுவிய பாஜகவினர்...
பீகாரில் எப்படி
பீகாரில்தான் காங்கிரஸ் முதலில் கூட்டணி அமைக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் பீகாரில் நிலை அப்படி இல்லை . அங்கு காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம், சிறிய கட்சிகள் ஆகியவற்றுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் இதுவரை இந்த கூட்டணியை இறுதி செய்யாமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறது.
டெல்லியில் பிரச்சனை
டெல்லியிலும் இதேபோல் ஆம் ஆத்மி காங்கிரஸ் இடையே கூட்டணி உருவாகவில்லை. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பலமுறை கேட்டும் கூட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூட்டணி கதவை திறக்கவில்லை. டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரான ஷீலா தீட்சித் - அரவிந்த் கெஜ்ரிவால் இடையே நிலவும் பிரச்சனை காரணமாக அங்கு கூட்டணி உருவாகவில்லை.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்திலும் இதே நிலைதான் நீடித்து வருகிறது. அங்கு காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணியில் சேரும் என்று கருதப்பட்டது. அவர்களும் இடங்களை ஒதுக்கிவைத்துவிட்டு காங்கிரஸ் வந்து பேசும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் இதுவரை காங்கிரஸ் கட்சி அங்கு இடதுசாரிகளுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுப்படவில்லை.
உத்தர பிரதேச கூட்டணி
உத்தர பிரதேசத்திலும் அதேதான் நிலை. அங்கு காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ், சமாஜ்வாதியுடன் எளிதாக கூட்டணி அமைத்து இருக்கலாம். ஆனால் அகிலேஷ் யாதவ் - ராகுல் காந்தி இடையே இருக்கும் ஈகோ பிரச்சனை இந்த கூட்டணி உருவாவதை தடுத்துவிட்டது. இப்போது அங்கு பாஜகவையும் சேர்த்து மும்முனை போட்டி நிலவுகிறது.
காஷ்மீர் கூட்டணி
காஷ்மீரில் கதை இன்னும் மோசம். அங்கு காங்கிரஸ் மற்றும் பரூக் அப்துல்லாவின் தேசிய கான்பிரன்ஸ் கட்சி இரண்டும் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் 6 இடங்களில் 3ல் மட்டுமே இரண்டு இணைந்து போட்டியிடும். 2ல் இரண்டு கட்சிகளும் மோத இருக்கிறது. இன்னும் ஒரு தொகுதி குறித்து எதுவும் முடிவாகவில்லை. அதேபோல் மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை.
எங்குமே இல்லை
சரியாக சொல்ல வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியின் மெகா கூட்டணி என்பது கானல் நீராக மாறிவிட்டது என்றுதான் கூறவேண்டும். உத்தர பிரதேசம், பீகார், காஷ்மீர், டெல்லி, மஹாராஷ்டிரா என்று எங்குமே காங்கிரஸ் இன்னும் முழுதாக கூட்டணி வைக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில் காங்கிரஸ் மிக மந்தமாக செயல்பட்டு வருகிறது.
ராகுல் காந்தி
இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒருவேளை லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடையும் பட்சத்தில் அதற்கு பின்வரும் விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.
1. முக்கிய மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்காதது.
2. மாநில தலைவர்களுடன் ராகுல் காந்திக்கு இருக்கும் ஈகோ.
3. பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மாநில கட்சிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது.
4. தேர்தலை 20 நாளில் வைத்துக் கொண்டு மந்தமாக இருப்பது.
5.கூட்டணி கைகூடி வரும் இடங்களில் ஒன்று இரண்டு இடங்களுக்காக மொத்தமாக கூட்டணியை கைவிடுவது என்று பல தவறுகளை காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர் ராகுல் காந்தியும் செய்து வருகிறார்கள்.