ஹைதராபாத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை.. நாடாளுமன்றத்தில் எம்பிகள் ஆவேசம்
டெல்லி: ஹைதராபாத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதற்கு லோக்சபாவில் பல்வேறு கட்சி எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து பேசினார்கள். இதேபோல் நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்தும் எம்பிக்கள் குரல் எழுப்பினர்.
ஹைதராபாத்தில் 27 வயதாகும் பெண் கால்நடை மருத்துவரை கடந்த புதன்கிழமை இரவு மது அருந்தி இருந்த லாரி ஓட்டுநர்கள் 4 பேர் பலாத்காரம் செய்து கொலை செய்தனர்.
இதற்காக முன்னதாக பெண் மருத்துவரின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி அவரை நாசம் செய்து கொன்றுள்ளனர். மொத்த தேசமும் இச்சம்பவத்தால் கொதித்து போய் உள்ளது. குற்றவாளிகளை தூக்கிலட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
சாபாநாயகர் அனுமதி
இந்நிலையில் லோக்சபாவில் ஹைதரபாத் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான விவாதத்திற்கு அனுமதி கேட்டு எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்தனர். இதையடுத்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பூஜ்ய நேரத்தில் விவாதிக்க அனுமதிப்பதாக தெரிவித்து அனுமதித்தார்.
கடும் தாக்கு
இதையடுத்து லோக்சபாவில் பேசிய காங்கிரஸ் எம்பி உத்தம் குமார் ரெட்டி, 26 வயது பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் தெலுங்கானா மாநில உள்துறை அமைச்சரின் கருத்து கொஞ்சம் கூட உணர்வுபூர்வமாக இல்லாத கருத்து என்று கண்டித்தார். ஆரம்பத்தில் வழக்குத் தொடர தாமதப்படுத்தியதற்காக அவர் தெலுங்கானா மாநில காவல்துறையினரையும் கடுமையாக அவர் விமர்சித்தார்.
கோவை சிறுமி
இதைத்தொடர்ந்து பேசிய திமுக எம்பி டிஆர் பாலு, கோவையில் கும்பல் இளைஞர்களால் பள்ளி சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பியதுடன், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்த நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தூக்கிலட வேண்டும்
ஹைதராபாத் பெண் டாக்டர் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சௌகத் ராய் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
பிஜேடி எம்பி கேள்வி
டெல்லி பெண் "நிர்பயா"வை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன் என்று பினாக்கி மிஸ்ரா (பிஜேடி) கேள்வி எழுப்பினார்.