பிரதமருக்கு மட்டுமே ஸ்பெஷல் பாதுகாப்பு.. லோக்சபாவில் தாக்கலானது எஸ்பிஜி சட்ட திருத்த மசோதா
டெல்லி: லோக்சபாவில் பிரதமருக்கு மட்டும் எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதா இன்று லோக்சபாவில் நிறைவேறியுள்ளது.
இன்று லோக்சபாவில் பிரதமருக்கு மட்டும் எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தார்.
சோனியா காந்தி போன்ற உயர் மட்ட தலைவர்களின் குடும்பத்தின் எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெற அரசாங்கம் முடிவு செய்துள்ள போதிலும் அதற்கு பதிலாக சிஆர்பிஎஃப் வீரர்களின் 'இசட்-பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்படும் என்று திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்வான விவாதத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், பழிவாங்கும் அணுகுமுறையுடன் பாஜக எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வது இல்லை என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அமித்ஷா கூறுகையில், :"சோனியா காந்தி குடும்பத்தினரிடமிருந்து பாதுகாப்பைத் திரும்பப் பெறுவதற்காக எஸ்பிஜி சட்டம் திருத்தப்பட்டுள்ளது என்ற எண்ணம் உருவாகி வருகிறது. சோனியா காந்தி குடும்பத்தின் பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை, ஆனால் நாடு முழுவதும் வழங்கப்படும் முன்கூட்டிய பாதுகாப்பு தொடர்பு மற்றும் ஆம்புலன்ஸ் வசதியுடன் 'இசட்-பிளஸ்' பாதுகாப்புக்கு மாற்றப்பட்டுள்ளது, " என்ற அமித்ஷா விவாதத்தின் போது தெரிவித்தார்
முன்னாள் பிரதமர்கள் சந்திர சேகர், ஐ.கே. குஜ்ரால் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரிடமிருந்து எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டபோது, யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று அமித் ஷா கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். எனினும் உறுப்பினர்களின் போதிய ஆதரவுடன் எஸ்பிஜி பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேறியது.