நாளை மூன்றாம் கட்டமாக 115 தொகுதிகளில் நடைபெறும் மக்களவைத் தேர்தல்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
டெல்லி: 17-வது மக்களவைக்கான மூன்றாம் கட்ட தேர்தல் நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ளது. மூன்றாம் கட்டமாக நாளை 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 115 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த மார்ச் 10-ம் தேதி அறிவித்தார். மேலும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறினார்.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கடந்த 11-ம் தேதி 20 மாநிலங்களிலுள்ள 91 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், 18-ம் தேதி 13 மாநிலங்களில் 95 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தலின் போது தமிழகத்தில் வேலூர் தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது.
இந்திய தேசிய பாதுகாப்பு.. புதிய கொள்கை அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்.. இதுதான் சிறப்பம்சம்!
மூன்றாம் கட்ட தேர்தல் மற்றும் தொகுதி விவரங்கள்:
முதல் இரண்டு கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில், மூன்றாவது கட்டமாக நாளை 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மூன்றாம் கட்டமாக கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகள், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகள், கோவாவில் உள்ள 2 தொகுதிகள், அசாமில் 4 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், சத்தீஷ்கர் மாநிலத்தில் 7 தொகுதிகள், கர்நாடகத்தில் 14 தொகுதிகள், மராட்டியத்தில் 14 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 5தொகுதிகள், காஷ்மீரில் 1 தொகுதி, திரிபுராவில் 1 தொகுதிகளில் தேர்தல் நாளை நடக்கிறது.
யூனியன் பிரதேசங்கள் மற்றும் திரிபுரா:
13 மாநிலங்கள் தவிர யூனியன் பிரதேசங்களான ஹவேலி மற்றும் டாமன் டையூ ஆகியவற்றிலும் மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. ஹவேலியில் 1 மக்களவை தொகுதியிலும், டாமன் டையூவின் 1 மக்களவை தொகுதியிலும் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுரா கிழக்கு தொகுதியில் 18-ம் தேதி தேர்தல் நடைபெற இருந்த தேர்தல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த தொகுதிக்கும் சேர்த்து நாளை தேர்தல் நடைபெறுகிறது
களை கட்டிய தேர்தல் பிரச்சாரம்..காங்கிரஸ் உற்சாகம்
மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி என முன்னணி அரசியல் தலைவர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். உத்திரப்பிரதேசத்தின் அமேதியில் களமிறங்கியுள்ள ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியிலும் களமிறங்கியுள்ளார். கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுவது அந்த மாநில காங்கிரசார் இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஓய்ந்த பிரச்சாரம் மற்றும் தீவிர கண்காணிப்பு
மூன்றாம் கட்ட மக்களவை தேர்தலுக்காக கடந்த 1 மாதமாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நேற்று மாலை 6 மணியுடன் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில், பிரச்சாரம் மேற்கொள்ளவோ கட்சி சின்னம் தொடர்பான விளம்பரங்களை வெளியிடவோ தடை விதிக்கப்பட்டது.நடந்து முடிந்த இரண்டு கட்ட மக்களவைத் தேர்தலிலும், சிறு சிறு அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டன.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில், 5-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். எனவே மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. துணை ராணுவம், உள்ளூர் காவலர்கள் என சுமார் 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.