2024 லோக்சபா தேர்தல்: பிரசாந்த் கிஷோர் ஐடியா- காங். அல்லாத எதிர்க்கட்சிகளுடன் இன்று சரத்பவார் ஆலோசனை
டெல்லி: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகம், மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல்களுடன் தமது தேர்தல் வியூக பணிகளை முடித்துக் கொள்கிறேன் என்று பகிரங்கமாக சொன்னார் பிரசாந்த் கிஷோர். தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர்.
பாஜகவை தோற்கடிக்க 3ஆம் அணி? கண்டிப்பாக வாய்ப்பில்லை.. அடித்துக் கூறும் பிரசாந்த் கிஷோர்.. ஏன்?
சரத்பவாருடன் பி.கே. சந்திப்பு
ஆனால் தற்போது லோக்சபா தேர்தல் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை ஒரே வாரத்தில் 2 முறை சந்தித்துள்ளார் பிரசாந்த் கிஷோர். இந்த சந்திப்புகளில் அரசியல் முக்கியத்துவம் இல்லை என்று பிரசாந்த் கிஷோர் கூறி வருகிறார். ஆனால் இந்த சந்திப்புகளைத் தொடர்ந்தே காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை சரத்பவார் இன்று டெல்லியில் கூட்டியுள்ளார்.
சரத்பவார் இல்லத்தில் ஆலோசனை
டெல்லியில் சரத்பவார் இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் தமது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
யார் யார் பங்கேற்பு?
நவாப் மாலிக் தமது ட்விட்டர் பக்கத்தில் யார் யார் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என்கிற பட்டியலையும் பகிர்ந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸின் யஷ்வந்த் சின்ஹா, பவன் வர்மா, ஆம் ஆத்மி சஞ்சய் சிங், இ.கம்யூ டி. ராஜா, தேசிய மாநாட்டு கட்சி பரூக் அப்துல்லா, நீதிபதி ஏபி சிங், ஜாவேத் அக்தர், கேடிஎஸ் துள்சி, கரன் தாப்பர், முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி உள்ளிட்டோர் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 லோக்சபா தேர்தலுக்கான தொடக்கம்?
நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்கப்படும் என்று நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். ஆனால் 2024 லோக்சபா தேர்தலுக்காக காங்கிரஸ்- பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளின் தொடக்கம்தான் இது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. இதே கருத்தை மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.