நாடாளுமன்றத் தேர்தல் மார்ச் மாதம் அறிவிப்பு?... ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம்?
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் வரும் ஜூன் 3-ஆம் தேதி முடிவடைகிறது. அதற்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகளும் தொகுதி பேரம், கூட்டணி பேரம் என பேசி வருகின்றன.
3-ஆவது அணி
பாஜக தலைமையில் ஓர் அணியும் காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் -பாஜக இல்லாத 3-ஆவது அணியை உருவாக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திட்டமிட்டு வருகிறார்.
சட்டசபை
தொகுதி பங்கீட்டில் சுமூக முடிவு எட்டப்பட்டவுடன் எந்த கட்சி எந்த கூட்டணியில் இருக்கும் என்ற தகவல் தெரியவரும். சிக்கிம் சட்டசபையின் பதவிக்காலம் மே 27-ஆம் தேதியுடனும், அருணாசல பிரதேச சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் 1-ஆம் தேதியுடனும், ஒடிசா சட்டசபையின் பதவிக் காலம் ஜூன் 11-ஆம் தேதியுடனும், ஆந்திர சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் 18-ஆம் தேதியுடனும் முடிவடைகிறது.
5 மாநிலங்களுக்கும்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காஷ்மீர் மாநில சட்டசபை கலைக்கப்பட்டது. இதனால் 6 மாத காலத்துக்குள் அந்த சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனால் நாடாளுமன்றத் தேர்தலுடன் மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தலாம் என தேர்தல் ஆணையம் யோசனையில் உள்ளது.
தேர்தல் ஆணையம்
எத்தனை கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்துவது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். எனவே நாடாளுமன்ற தேர்தல் தேதியும், 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியும் வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக டெல்லியில் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.