காவிரி பிரச்சினை குறித்து இனி லோக்சபாவில் பேச முடியாது.. அதிமுகவுக்கு சபாநாயகர் கண்டனம்
டெல்லி: காவிரி பிரச்சினை குறித்து இனி மக்களவையில் பேச முடியாது என அதிமுகவுக்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மாநிலம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி பிரச்சினை தொடர்பாகவும் அதிமுக எம்பிக்கள் முழக்கமிட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் அமளியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோல் இன்றும் அதிமுக எம்பிக்கள் மக்களவையில் முழக்கமிட்டனர். அப்போது அவர்களை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டித்தார்.
அவர் கூறுகையில் மக்களவையில் காவிரி பிரச்சினை குறித்து பேச முடியாது. காவிரி பிரச்சினையை தீர்ப்பதில் உங்களுக்கு விருப்பமில்லை.
இங்கு கூச்சலிடுவதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியுமா. நான் பலமுறை கேட்டுக் கொண்டும் முழக்கம் இடுவதை நீங்கள் நிறுத்துவதாக தெரியவில்லை. எனவே நுகர்வோர் பாதுகாப்பு மசோதா நாளை விவாதிக்கப்படும் என கூறி அவையை ஒத்திவைத்தார்.