அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு சகோதரியை இழந்துவிட்டேனே.. குலாம் நபி ஆசாத் உருக்கம்
Recommended Video
டெல்லி: அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்லதொரு சகோதரியை நான் இழந்துவிட்டேனே என குலாம் நபி ஆசாத் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெளியுறுவுத் துறை அமைச்சராக இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். இவருக்கு நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவருக்கு வயது 67. அவரது உடலுக்கு பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக தலைவர்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சுஷ்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அவர் கூறுகையில் சுஷ்மாவை இழந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இத்தனை சிறிய வயதில் எங்களை விட்டு அவர் பிரிந்து சென்றுவிடுவார் என நாங்கள் கற்பனை செய்தும் பார்க்கவில்லை. அரசியலை தூர வைத்துவிட்டு பார்த்தால் நான் இன்று ஒரு சகோதரியை இழந்து நிற்கிறேந்.
நாங்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது எங்கள் பெயர்களால் அழைத்து கொள்ள மாட்டோம். சகோதரனே, சகோதரியே என பரஸ்பரம் அழைத்து கொள்வோம்.
என்னை பார்த்தால் சகோதரனே சவுக்கியமா என சுஷ்மா கேட்பார். நானும் அவரை பார்த்தால் சகோதரியே சவுக்கியமா என கேட்பேன். இப்போது அவர் என்னை விட்டு போய்விட்டார் என உருக்கமாக தெரிவித்தார் குலாம்.