பயந்தது மாதிரி நடந்துவிட்டது.. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண் கருத்து
டெல்லி: தனது அச்சம் நிஜமாகிவிட்டதாகவும், நீதியின் மீதான நம்பிக்கை அற்றுப் போய் விட்டதாகவும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்த பெண், கருத்து கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 22 நீதிபதிகளுக்கு பிரமாண பத்திரங்களை அனுப்பி வைத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இது தொடர்பாக, மூத்த நீதிபதி ஏ.எஸ்.போப்டே, தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தி வந்தது. சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தியதோடு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடமும் இந்த குழு விசாரணை நடத்தி இருந்தது.
இந்த நிலையில், விசாரணையின் முடிவில், அந்த பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று உச்சநீதிமன்ற குழு அறிக்கை தாக்கல் செய்து, புகாரை தள்ளுபடி செய்துள்ளது.
இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் புகார் அளித்த அந்தப் பெண் ஒரு அறிக்கையை ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: எனது அச்சம் இன்று நிஜமாகிவிட்டது. நீதி பரிபாலனம் மீதான எனது நம்பிக்கை முழுமையாக அற்றுப் போய்விட்டது. எனது புகாரில் அடிப்படை ஆதாரம் இல்லை என்று நீதிபதிகள் குழு தெரிவித்து உள்ளது. ஆனால், இந்த நாட்டின் குடிமகள் என்ற அடிப்படையில், எனக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி.. விசாரணை குழு அதிரடி
நிறைய ஆதாரங்களை நீதிபதிகள் குழு முன்பாக அளித்தும் கூட, எனது புகாரை தள்ளுபடி செய்துள்ளனர். எனக்கு உரிய நீதி வழங்கப்படாததுடன், எனக்கு பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளதால், நானும், எனது குடும்பமும், தற்போது மிகுந்த அச்சத்தில் உள்ளோம்.
புகார் அளித்த எனக்குகூட, விசாரணைக் குழுவின் அறிக்கை நகல் அளிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எதற்காக எனது புகார் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை, நான் அறிய முடியாத சூழ்நிலையில் உள்ளேன்.
அடுத்த கட்டமாக, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எனது வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அந்த பெண்மணி தெரிவித்துள்ளார். விசாரணை அறிக்கை, விவரங்களை வெளிப்படுத்தப் போவதில்லை என நீதிபதிகள் குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.