காற்றில் பறந்த சமூக விலகல்.. கூட்டமாக செல்லும் தொழிலாளர்கள்.. குக்கிராமங்களுக்கு கொரோனா விசிட்?
டெல்லி: தலைநகர் டெல்லியிலிருந்து பல்வேறு சொந்த மாநிலங்களுக்கு சாரை சாரையாக படையெடுக்கும் மக்கள் கொரோனா தொற்றை தங்கள் கிராமங்களில் பரப்ப வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. மேலும் கிராமங்களில் ரத்த பரிசோதனை கூடங்கள், மருத்துவமனைகள் இல்லாததால் நோயை கண்டறிவதிலும் கட்டுப்படுத்துவதிலும் சிக்கல் எழுந்துள்ளதாக பலர் கவலைத் தெரிவிக்கின்றனர்.
Recommended Video
உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்கள் பணிகளுக்காக டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக டெல்லியில்தான் அதிக அளவிலான மற்ற மாநில மக்கள் உள்ளனர்.
குடும்பத்தினர்
நாடு முழுவதும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் 13.9 கோடி பேர் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் டெல்லியிலிருந்து சொந்த ஊர்களுக்கு சாரை சாரையாக புலம்பெயர்கிறார்கள். இதற்கு இரு காரணங்கள் ஒன்று கொரோனா பீதி, மற்றொன்று வேலையின்மை. கட்டடப் பணி, உற்பத்தித் தொழில், உணவகங்கள் (பார்சல் மட்டுமே), போக்குவரத்துத் துறை, வீட்டு வேலைகள் ஆகியவை முடங்கியுள்ளதால் இடம்பெயர்ந்த தொழிலாளர்களால் தங்கள் குடும்பத்தினருக்கு உணவளிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.
கிராமங்கள்
அது போல் பணமில்லாமல் தங்கியிருக்கும் மேன்ஷன்களுக்கு வாடகைக் கொடுக்கவும் முடியவில்லை. இந்த ஊரடங்கு உத்தரவே சமூக பரவலை தடுக்கத்தான். ஆனால் டெல்லியிலிருந்து இது போன்று ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்கிறார்கள். கூட்டம் கூட்டமாக செல்வதால் கொரோனா பரவும் அச்சம் அதிகமாக உள்ளது. இவர்கள் மிகவும் தொலைதூர கிராமங்களுக்கு செல்வதால் கொரோனாவையும் இவர்கள் கொண்டு செல்வார்களோ என்ற அச்சம் எழுகிறது.
பிரச்சினைகள்
பொதுவாக ஊடகங்களில் காண்பிப்பது டெல்லி மட்டுமே. ஆனால் மற்ற மாநிலங்களில் இருந்து இது போல் மக்கள் புலம்பெயர தொடங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. மேற்கண்ட மாநிலங்களிலிருந்து இந்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத சூழல் நிலவுகிறது. இந்த கொரோனா என்பது போர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இது வேறு மாதிரியான போர். இங்கு எதிரி யார் என்றே நமக்கு தெரியாது.
சுகாதார தொழிலாளர்கள்
இந்த நோயை தேசிய பேரிடர் என அரசு அறிவித்துள்ள போதிலும் இது சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க மாநில அரசையே நம்பியுள்ளது. ஆனால் புலம்பெயர்ந்தவர்களின் நடமாட்டமும் அவதியும் இதை முற்றிலும் மாற்றுகிறது. இது போல் ஒரு கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நகரங்களில் இருந்து புறப்பட்டால் சுகாதார அமைப்பில் பேரழிவை உருவாக்கும். இவ்வாறு புலம்பெயரும் அனைத்து தொழிலாளர்களும் வைரஸை சுமந்து செல்வோராக இருக்கலாம். தற்போது இந்த நோய் பரிசோதனைக் கூடம், மருத்துவமனை இல்லாத இடங்களுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது.
நகரங்கள்
நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு வைரஸ் செல்வதை தடுக்கும் செயலை லாக்டவுன் செய்ய தவறிவிட்டது. இவ்வாறு சொந்த மாநிலங்களுக்கு செல்லும் நபர்களுக்கு மாநில எல்லையில் எந்தவித சோதனையும் செய்யப்படுவதில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநில எல்லைகளையும் அங்குளள பேருந்து நிலையங்களையும் ராணுவத்திடம் ஒப்படைப்பதுதான் சிறந்தது. தேவைப்பட்டால் கடற்படை, மற்றும் இதர துணை ராணுவப் படையினரும் பயன்படுத்தலாம்.
போக்குவரத்து
இது போல் புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு சுத்தமான சுகாதாரமான போக்குவரத்து, உணவு உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும் வசதி. பின்னர் அவசரத் தேவை என்றால் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ராணுவ மருத்துவமனை பரிசோதனை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவற்றை செய்தால்தான் நோய்கள் தொலைதூர கிராமம் வரை செல்வதை தடுத்து நிறுத்த முடியும் என்கிறார்கள்.