மருத்துவ வசதி குறைவு, மக்கள் தொகையும் அதிகம்.. கட்டுக்குள் கொரோனா.. உத்தர பிரதேசம் சாதித்தது எப்படி?
டெல்லி: உத்தரபிரதேசத்தின் மக்கள் தொகையான 23.15 கோடி பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரிட்டனின் மொத்த மக்கள்தொகைக்கு சமமானதாகும். ஆச்சரிய தகவல் என்னவென்றால், இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருந்தபோதிலும், கொரோனா பாதிப்பு உ.பி.யில் கட்டுப்பாட்டில் உள்ளது.
மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் என்று பெயர் பெற்றுள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசம் எப்போதுமே கொரோனா சார்ந்த விவாத பொருளாக இருந்து வருகிறது.
உத்தரபிரதேசம் பற்றிய பேச்சை நீங்கள் அதிகம் கேட்டிருக்க மாட்டீர்கள். அதற்கு காரணம் உள்ளது.
இனிதான் புது வளர்ச்சி அடையும்.. மீண்டு வரும் தலைநகர்.. சிங்கார சென்னைக்கு காத்திருக்கும் குட் நியூஸ்
அதிக மக்கள் தொகை
இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கிடையில் கொரோனா கேஸ் எண்ணிக்கையில் உத்தரபிரதேசம் 5வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவை விட இரு மடங்கு மக்கள் தொகை இருந்தபோதிலும், 14% மட்டுமே பாதிப்பு பதிவாகியுள்ளது. ஒரு மில்லியனுக்கு எத்தனை பேர் பாதிப்பு என்ற புள்ளி விவரத்தை எடுத்துப் பார்த்தால், மேகாலயா, ஜார்கண்ட், பீகார் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, சிறந்த மாநிலமாக விளங்குகிறது உத்தர பிரதேசம்.
உத்தர பிரதேசம் சாதனை
உ.பி.யில் 10 லட்சம் மக்களில் 133 பேருக்கு மட்டுமே கொரோனா கேஸ் பதிவாகியுள்ளது. டெல்லியில் இது- 5,189, மகாராஷ்டிரா - 1,777, தமிழ்நாடு - 1,566, தெலுங்கானா - 741 மற்றும் ஹரியானா - 639. உ.பி. தனது பரிசோதனையை அதிகரித்து வருகிறது. மொத்தம் 9,22,000 சோதனைகளை நடத்தியுள்ளது. மக்கள் தொகையை ஒப்பிட்டால் இது குறைவுதான். ஆனால், சோதித்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பதிவாகிறது என்பதுதான் முக்கியம். அந்த விகிதாச்சாரம் குறைவுதான்.
கொரோனா விகிதம் குறைவு
உ.பி. 3.25% என்ற அளவில், மிகக் குறைந்த கொரோனா பாசிட்டிவ் விகிதத்தைக் கொண்டுள்ளது. அதாவது, 100 பேருக்கு சோதனை நடத்தினால், 3.25 என்ற அளவுக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. இது ஆச்சரியமளிக்கிறது. நாட்டின் வேறு சில முக்கிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இந்த தொற்றுநோய் உத்தர பிரதேச மாநிலத்தில் பரவலாக இல்லை என்பதை இது எதிரொலிக்கிறது.
புலம்பெயர் தொழிலாளர்கள்
vஜூன் மாதத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜூலை 7ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 1,332 கேஸ்கள் பதிவாகியுள்ளன. தினசரி கொரோனா கேஸ்களில் 1,000ஐத் தாண்டிய முதல் நாள் ஜூலை 5 மட்டுமே. அதுவரை குறைவாகத்தான் இருந்தது. பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்தாலும், இது குறைவான பாதிப்பு எண்ணிக்கைதான் என்பது கவனிக்கத்தக்கது.
சுகாதார வசதி இல்லை
உ.பி. 1 மில்லியன் மக்கள்தொகையில், 3 கொரோனா இறப்புகளை மட்டுமே பதிவு செய்கிறது. இது தேசிய சராசரியான 15 ஐ விட கணிசமாகக் குறைவு. ஒப்பீட்டளவில், இது இந்தியாவின் பெரும்பாலான பெரிய மாநிலங்களை விடவும் குறைவாக உள்ளது. உ.பி.யில் மக்கள்தொகை அதிகம், போதிய சுகாதார உள்கட்டமைப்பு கிடையாது. வறுமை, ஏழ்மை அதிகம் உள்ள மாநிலம். ஆனால், கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தவும், இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்கவும் எவ்வாறு முடிந்தது?
கடுமையான விதிமுறைகள்
இந்த சாதனைக்கு பல காரணி இருக்கலாம். லாக்டவுன் வழிகாட்டுதல்களை போலீஸ் உதவியோடு கண்டிப்பாக கடைபிடிப்பது, மாநில அதிகாரிகளால் விதிகள் மற்றும் ஒழுங்குமுறை கண்காணித்தல் மற்றும் செயல்படுத்துதல் சரியாக இருப்பது போன்றவை ஒரு காரணம் என்றால் சுகாதார நிபுணர்களால் வேறு ஒரு முக்கிய காரணமும் கூறப்படுகிறது.
கிராமங்களில் அதிக மக்கள்
கிராமப்புற மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் உத்தர பிரதேசம். சுமார் 77% மக்கள் கிராமங்களில் வசிப்போர். இந்த விகிதம் மற்ற மாநிலங்களில் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் நகரங்கள்தான். நகர்ப்புற மாநிலமாக மாறிவிட்டது தமிழகம். கிராமங்களில் தொழில்கள், விவசாயத்திற்கு ஊக்கம் தராததால், மக்கள் கிராமங்களில் இருந்து நகரங்களில் குடியேறுகிறார்கள். கிராமங்களில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக இருப்பதால், கொரோனா எளிதாக பரவாது. நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் மக்கள் தடுக்கப்பட்டால், கிராமங்களில் நோய் பரவலே ஏற்பட வாய்ப்பு கிடையாது. இதுவும் உத்தர பிரதேச வெற்றிக்கு முக்கிய காரணம்.