கேரளாவில் மளமளவென உயரும் கொரோனா.. இந்த இரண்டும்தான் முக்கிய காரணம்.. வல்லுநர் குழு ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: வேகம் குறைந்த வேக்சின் பணிகள், சுகாதார உள்கட்டமைப்பு பிரச்சினைகள் ஆகியவை காரணமாகவே கேரளாவில் சமீப காலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாகத் தேசிய சுகாதார கட்டுப்பாட்டு மையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏறப்பட்டது. இப்போது நாட்டில் வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள போதிலும், சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
குறிப்பாக, இரண்டாவது அலையின் சமயத்தில் வைரஸ் பாதிப்பை அதிகரிக்காமல் பார்த்துக் கொண்ட கேரளாவில் இப்போது வைரஸ் பாதிப்பு உயர தொடங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு கேரளாவுக்கு எச்சரிக்கை அளித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி வழக்கு: ஹைகோர்ட்டில் தி.மு.க அரசு சரியாக வாதாடவில்லை.. சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு!
2 காரணங்கள்
இந்நிலையில், கேரளாவில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம் என்பதை ஆராய ஆறு பேரைக் கொண்ட தேசிய சுகாதார கட்டுப்பாட்டு மையத்தின் குழுவை கடந்த வாரம் மத்திய அரசு கேரளாவுக்கு அனுப்பியது. இந்நிலையில், தற்போது டெல்லி திரும்பியுள்ள அந்தக் குழு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. வேகம் குறைந்த வேக்சின் பணிகள், சுகாதார உள்கட்டமைப்பு பிரச்சினைகள் ஆகியவை காரணமாகவே கேரளாவில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக வல்லுநர் குழு குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
மன்சுக் மாண்டவியா
இது குறித்து மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில், "இது பற்றி கேரள முதல்வர் பிரனாயி விஜயனிடம் பேசினேன். மேலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேரள முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கேரள அரசு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். மத்திய அரசு இதில் கேரளாவுக்கு முழு ஆதரவைத் தரும்" என ட்வீட் செய்துள்ளார்.
கேரளா வைரஸ் பாதிப்பு
இப்போது நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உறுதி செய்யப்படும் மாநிலங்களில் ஒன்றாகக் கேரளா உள்ளது. கடந்த வாரம் இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட கொரோனா கேஸ்களில் 49.85% கேரளா மாநிலத்தில் கண்டறியப்பட்டது. குறிப்பாக, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் எச்சரிக்கை தரும் வகையில் 17.23% ஆக உள்ளதாக வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாசிட்டிவ் விகிதத்திற்கு ஏற்ப மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இப்படி ஊரடங்கை அறிவித்துள்ளது பெரியளவில் பலன் தரவில்லை என்றே சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரிசோதனை
கேரளாவில் நடத்தப்படும் கொரோனா சோதனைகளில் 20% மட்டும் RT PCR சோதனைகளாக நடத்தப்படுகிறது. 80% ரேப்பிட் ஆன்டிஜன் முறையிலேயே சோதனை நடத்தப்படுகிறது. ரேப்பிட் ஆன்டிஜன் முறையில் சோதனை நடத்தப்படும் போது, கொரோனா பாதிப்பு மிஸ் ஆக வாய்ப்புகள் அதிகம். எனவே, RT PCR சோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் வல்லுநர் குழு பரிந்துரை அளித்துள்ளது.
வேக்சின் பணிகள்
அதேபோல அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே கேரளாவில் வைரஸ் சோதனை நடத்தப்படுகிறது. அதற்குப் பதிலாக கொரோனா பாதிப்பு ஒரு இடத்தில் அதிகம் கண்டறியப்பட்டால், அங்கு வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனை நடத்த வேண்டும் மேலும், தற்போது வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீடுகளிலேயே தனிமையில் உள்ளனர் என்பதால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர் கண்டறியும் contact tracing முறையைத் தீவிரப்படுத்த வேண்டும். அதேபோல வேக்சின் பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் கேரள அரசிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் வரவில்லை.