நவ. 1ம் தேதி முதல் வீட்டுக்கு சமையல் சிலிண்டர் விநியோகம் செய்யும் நடைமுறை முற்றிலும் மாறப்போகிறது!
டெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசு முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன்படி ஒடிபி கூறினால் தான் இனி சிலிண்டர் கிடைக்கும். முறைகேடை தடுக்கவும், எளிமையாக்கவும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சமையல் கேஸ் சிலிண்டர் வீட்டுக்கு விநியோகம் செய்யும் இப்போது உள்ள நடைமுறை முற்றிலும் மாறப்போகிறது. எண்ணெய் நிறுவனங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
அடுத்த மாதம் முதல் இந்த புதிய விநியோக நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது எனவே இனி சிலிண்டரை புக்கிங் செய்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவலை இப்போது பார்ப்போம்.
நவ.1 முதல் புதிய நடைமுறை
மத்திய அரசின் அறிவிப்பின்படி வருகிற நவம்பர் 1 ம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்வதில் புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டுக்கு சிலிண்டரை முன்பதிவு செய்யும்போது பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். சிலிண்டர் விநியோகம் செய்ய வரும் ஊழியரிடம் இந்த எண்ணை கூறினால் தான் இனி சிலிண்டர் வழங்கப்படும்.
மொபைல் எண் பதிவு
சரி ஒருவேளை மொபைல் போன் எண்ணை பதிவு செய்யவில்லை என்றால் ஒடிபி வராது. அப்படி என்றால் என்ன செய்வது என்பதற்கும் எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லையென்றால், சிலிண்டர் விநியோகம் செய்ய வரும் ஊழியர் புதிய மொபைல் எண்ணை பயன்பாட்டில் பதிவு செய்வார். அப்போது, ஓடிபி.யை உருவாக்க முடியும். அந்த ஒடிபியை காண்பித்து சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம்.
தவறான முகவரி
முறைகேடுகளை தடுக்கும் விதமாக இனி ஓடிபி எண்ணை கொடுக்காத வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் வழங்கப்பட மாட்டாது என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதேபோல் * வாடிக்கையாளரின் முகவரி மற்றும் செல்போன் எண் தவறாக இருந்தாலும், சிலிண்டர் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
100 நகரங்களில் அமல்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் சோதனை அடிப்படையில் நவம்பர் 1ம் தேதி முதல் இத்திட்டம் அமலாகிறது. ஒடிபி மூலம் சிலிண்டர் தரும் திட்டம் முதல் கட்டமாக நாடு முழுவதும் முக்கியமான 100 நகரங்களில் கொண்டுவரப்படுகிறது. சிலிண்டர்கள் முறைகேட்டை தவிர்க்கும் வகையில், இந்த புதிய முறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கொரோனாவால் நிறுத்தப்பட்ட சிலிண்டருக்கு இனி மானியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.