சி.ஏ.ஏ.வுக்கு எதிரான கடும் குளிரில் பெண்கள் தொடர் போராட்டங்கள்... உடைமைகளை போலீசார் பறித்தாக புகார்
டெல்லி/லக்னோ: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லி, லக்னோவில் கடும் குளிர், பனிமூட்டத்துக்கு நடுவே வெட்ட வெளியில் தொடர் போராட்டங்களை நடத்திய பெண்களின் போர்வைகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளை போலீசார் பறிமுதல் செய்தது சர்ச்சையாகி உள்ளது..
டெல்லி சஹீன்பாக் பகுதியில் வெள்ளிக்கிழமை முதல் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பெண்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இவர்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கு மேற்கொண்ட நடவட்டிக்கைகள் சர்ச்சையாகின.
லக்னோ போராட்டம்
இதே பாணியில் உத்தரப்பிரதேசம் லக்னோவில் வெள்ளிக்கிழமை முதல் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தை நடத்திய பெண்களையும் கலைக்க போலீசார் முயற்சித்தனர். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
கூடாரங்கள் அமைக்க முயற்சி
இது தொடர்பாக விளக்கம் அளித்த லக்னோ போலீஸ் அதிகாரி விகாஸ் சந்திரா திரிபாதி, லக்னோவின் கந்தகார் பகுதியில் அனுமதியின்றி பெண்கள் போராட்டம் நடத்தினர். அங்கேயே கூடாரங்கள் அமைக்கவும் சிலர் முயற்சித்தனர்.
வதந்தி பரப்புகின்றனர்
இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது போராட்டத்தில் பங்குபெறாத சிலர், அங்கு வந்து போர்வைகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளை போராட்டக்காரர்களுக்கு கொடுத்தனர். ஆகையால் அவர்களை கலைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் உரிய விதிகளின்படியே நடந்து கொண்டனர். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
மின்சாரம் கட்
ஆனால் போராட்டம் நடத்தப்பட்ட பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பலரும் அப்புறப்படுத்தப்பட்டு அருகில் உள்ள பொதுகழிப்பறைகளில் அடைக்கப்பட்டனர் என்கின்றனர் போராட்டக்காரர்கள்..
ஷேராகும் வீடியோக்கள்
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது. போராட்டக்காரகளிடம் இருந்து போர்வைகளை வலுக்கட்டாயமாக போலீசார் பறித்து செல்லும் வீடியோக்கள் அதிக அளவில் ஷேர் செய்யப்படுகின்றன. கொட்டும் பனியிலும் குளிரிலும் போராடியவர்களிடம் இருந்து உடைமைகளை போலீசார் பறித்து சென்றது தற்போது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.