என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை- எம் ஜே அக்பர்
டெல்லி: என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என மத்திய வெளியுறவு துறை இணையமைச்சர் எம் ஜே அக்பர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. அதன்படி மத்திய அமைச்சர் எம் ஜே அக்பர் மீதும் அமெரிக்காவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார்.
அந்த பெண் இன்டர்ன்ஷிப் பயிற்சி செய்த பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக வேறு ஒரு பத்திரிகைக்கு மெயில் அனுப்பியுள்ளார். இதுபோல் 10-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் அக்பர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே அரசு முறை பயணமாக வெளிநாட்டு சென்றுவிட்டு இன்று திரும்பிய அக்பர் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில் பாலியல் புகார் குறித்து விரிவான விளக்கம் அளிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. சித்தரிக்கப்பட்டவை., புனையப்பட்டவை ஆகும்.
குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறேன். எனவே புகார்தாரர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் குற்றச்சாட்டின் போது வெளிநாட்டில் இருந்ததால் உடனடியாக பதில் அளிக்க முடியவில்லை.
பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த புயல் எழுந்தது ஏன். எனது நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் வகையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்றார் அக்பர். இதனிடையே அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈமெயில் மூலம் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல்கள் எழுந்தன.
இது குறித்து அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை. மேலும் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை அவர் சந்திப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுவரை அவர் சந்திக்கவில்லை.